Last Updated : 12 Nov, 2014 08:37 AM

 

Published : 12 Nov 2014 08:37 AM
Last Updated : 12 Nov 2014 08:37 AM

பாரம்பரிய மொழிகளை ஒதுக்குவது நல்லதல்ல - தருண் விஜய் எம்.பி. சிறப்புப் பேட்டி

தமிழ் உட்பட பாரம்பரிய மொழிகளை ஒதுக்குவது தேசத்துக்கு நல்லதல்ல என்று உத்தராகண்ட் மாநில பாஜக எம்.பி. தருண் விஜய் கூறியுள்ளார். தனது சொந்த ஊரில் விரைவில் தமிழ்ப் பள்ளி தொடங்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. தருண் விஜய், தமிழ் மொழிக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறார். இவரது தமிழ்ப் பற்றை அங்கீகரிக்கும் வகையில் சென்னையில் நேற்று கவிஞர் வைரமுத்து ஏற்பாட்டில் பாராட்டு விழா நடந்தது.

இதில் பங்கேற்பதற்காக வந் திருந்த தருண் விஜய், ‘தி இந்து’ வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

திடீரென்று வைரமுத்து உங்களுக்கு பாராட்டு விழா நடத்துகிறாரே, இதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா?

வேறென்ன தமிழ்தான் காரணம். அவர் நாத்திகர். நான் அபரிமிதமான கடவுள் நம்பிக்கை கொண்ட இயக்கத்தில் உள்ளவன். கொள்கைகளை மீறி எங்களை தமிழ்தான் இணைத்திருக்கிறது. அவர் மிகப்பெரிய மனிதர். அவருக்கு நிறைய கடமைப்பட்டிருக்கிறேன்.

வடநாட்டைச் சேர்ந்தவர்கள் பெரிய அளவில் தமிழை கண்டுகொள்ளாத போது உங்களுக்கு மட்டும் எப்படி இந்த தமிழ்ப் பாசம்?

நான் பிறந்த உத்தராகண்ட் மாநிலம், பாரம்பரியான புனிதத் தலங்களை கொண்டது. அங்குள்ள ஆலயங்களுக்கு ஏராளமான தமிழர் கள் வருவதை இளம் வயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பாஞ்சஜன்யா இதழின் ஆசிரியராக இருந்தபோதே பாரதியாரைப் பற்றி பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். திருவள்ளுவர், பாரதியார் வளர்த்த தமிழ், பல்வேறு பக்தி இலக்கியங்களைக் கொண்டுள் ளது. எனவே, தமிழ்மொழியை காக்க வேண்டும் என்ற ஈடுபாட்டின் பேரில் தமிழுக்காக குரல் கொடுத்து வரு கிறேன்.

தமிழ் மொழியை மத அடிப்படையில் தான் ஆதரிக்கிறீர்களா?

மதத்தின் பெயரால் தமிழுக்காக குரல் கொடுக்கவில்லை. ஆனால், தமிழில் உள்ள பக்தி இலக்கியங் களையும், கோயில்களில் உள்ள அந்தக் கால கல்வெட்டுகளையும் ஒதுக்கிவிட்டு தமிழை கொண்டாட முடியாது. தமிழ் என்பது இந்தியாவின் பழமையும் பாரம்பரியமும் கொண்ட மொழி. இந்தக் காலத்தில் ஆங்கில கவர்ச்சி அதிகமாகிக்கொண்டே போவதால், வடக்கிலுள்ள முக்கிய நகரங்களில் இந்தியை மறப்பது போல் தமிழகத்திலும் தமிழ் புறக் கணிப்பு உள்ளது. நமது பாரம்பரிய மான மொழிகளை ஒதுக்குவது தேசத்துக்கு நல்லதல்ல.

நீங்கள் சார்ந்துள்ள பாஜக அரசு, ‘குரு உத்ஸவ்’, ‘சமஸ்கிருத வாரம்’, போன்ற செயல்களில் ஈடுபடுவது சரியா?

ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பாஜக அரசு எந்த மொழியையும் யார் மீதும் திணிக்க வில்லை. இந்தியும், சமஸ்கிருதமும் நமது தேசிய மொழிகளாகும். இதை முன்னெடுக்க வேண்டிய செயலில் தான் அரசு இயங்கியது. தமிழர்கள் மீது இந்தியையும் சமஸ்கிருதத் தையும் திணிக்க வேண்டியதில்லை. தமிழர்களுக்கு இந்தியும் சமஸ்கிருதமும் வேண்டாம் என்றால் அதை அவர்கள் விட்டுவிடலாம்.

தமிழுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டி மத்திய அரசை வலியுறுத்துவீர்களா?

திருவள்ளுவர் பிறந்தநாளை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்க வேண்டும். குஜராத் நீதிமன்றத்தில் குஜராத்தி மொழியில் வாதாடுவதுபோல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும், இந்திய அரசின் கப்பல் கட்டுமான நிறுவனமான மாக்சான் டாக் , கடல் கடந்து வாணிபம் செய்த ராஜேந்திர சோழனின் படத்தை பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளேன். சீக்கிரமே எங்கள் ஊரில் தமிழ்ப் பள்ளி ஒன்றை தொடங்க உள்ளேன்.

இவ்வாறு தருண் விஜய் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x