Published : 31 Aug 2017 09:11 AM
Last Updated : 31 Aug 2017 09:11 AM

கடல் அரிப்பால் இடிந்த வீடுகளை அதிகாரிகள் பார்வையிடவில்லை: பட்டினப்பாக்கம் மீனவர்கள் குமுறல்

பட்டினப்பாக்கத்தில் சீனிவாசபுரம் பகுதியில் கடல் அரிப்பால் இடிந்த வீடுகளை அதிகாரிகள் யாரும் பார்வையிடவில்லை என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், எண்ணூர் கடலோரப் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி, கடலின் சீற்றம் அதிகமாக இருந்தது. அதனால் கடலோரப் பகுதிகளில் அரிப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் இருந்த வீடுகள் இடிந்து விழுந்தன. கடல் நீரும் வீடுகளுக்குள் புகுந்தன. வீடுகளில் இருந்த உடைமைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன. இதனால் அப்பகுதியைச் சார்ந்த மீனவ மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, கடந்த 23-ம் தேதி பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் கடல் அரிப்பைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால், பட்டினப்பாக்கம் பகுதியில் அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடவில்லை என மீனவ மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, கடந்த ஆண்டு, கடல் சீற்றத்தால் வீடுகள் இடிந்தபோது, அதிகாரிகள், அமைச்சர், எம்எல்ஏ என பலர் பார்வையிட்டு ஆறுதல் கூறியதுடன், கணக்கெடுத்து, உரிய நிவாரணம் வழங்குவதாக உறுதியளித்திருந்தனர். இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. இந்நிலையில், தற்போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பார்வையிட அதிகாரிகள் யாரும் வரவில்லை. கணக்கெடுப்பும் நடத்தவில்லை. எங்களை அரசும், மக்கள் பிரதிநிதிகளும் புறக்கணித்து விட்டனர் ”என்றனர்.

இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது கடலரிப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்க, அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை. அதனால் நாங்கள் கணக்கெடுக்கவில்லை என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x