Published : 04 Aug 2017 09:15 AM
Last Updated : 04 Aug 2017 09:15 AM
ஆடிப் பெருக்கையொட்டி தங்க நகை வாங்க கடைகளில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால், வழக்கத்தைவிட 25 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாக நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆடி மாதத்தில் அம்மன், அம்பாள், ஆண்டாள் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கமாகும். அம்மன் கோயில்களில் அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல் போன்ற நிகழ்வுகளும் நடக்கும். இதேபோல், ஆடிப் பெருக்கையொட்டி திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு தங்க நகைகள் மற்றும் மாங்கல்யத்தில் கோர்க்க சுவாமி படங்கள் கொண்ட டாலர்களையும் மக்கள் நேற்று வாங்கிச் சென்றனர். இதனால், சென்னையில் தியாகராயநகர், மயிலாப்பூர், புரசைவாக்கம், பிராட்வே உள்ளிட்ட நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட நேற்று அதிகமாக இருந்தது. இதுதொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ‘‘ஆடிப்பெருக்கு தினத்தில் நகை வாங்கினால் வீட்டில் நகை அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதேபோல், சுபகாரியங்களுக்கும் மக்கள் நகை வாங்கிச் செல்வார்கள். எனவே, மக்கள் நேற்று ஆர்வத்துடன் நகைகளை வாங்கிச் சென்றனர். இளம் பெண்கள் லைட் வெயிட் கொண்ட புதிய வடிவமைப்பு நகைகளை விரும்பி வாங்கிச் சென்றனர். இதனால், வழக்கத்தைவிட நேற்று தங்க நகை விற்பனை 25 சதவீதம் அதிகரித்துள்ளது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT