Published : 18 Aug 2017 01:45 PM
Last Updated : 18 Aug 2017 01:45 PM

மேகதாது அணைக்கு அதிமுக அரசு ஒப்புதல் அளித்திருப்பது மிகப் பெரிய துரோகம்: துரைமுருகன்

உச்ச நீதிமன்றத்தில் மேகதாது அணைக்கு அதிமுக அரசு ஒப்புதல் அளித்திருப்பது தமிழகத்துக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '' 'காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது அருகே ஓர் அணையை கட்டலாமா? அப்படி கட்டப்பட்ட அணையின் மிகை நீரை தேக்கி வைத்து தமிழ்நாட்டுக்கும் தரலாமே?' என்ற யோசனையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சேகர் நாப்டே, 'தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்குவதில் தடையில்லை என்றால், கர்நாடக காவிரியில் புதிய அணை கட்ட எந்த எதிர்ப்பும் இல்லை' என்று கூறியதாக நாளிதழ் செய்தி தெரிவித்திருக்கிறது. தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், இப்படி ஒரு கருத்தை தெரிவித்திருப்பது தமிழகம் தற்கொலை செய்து கொள்வதற்குச் சமம்.

மேகதாதுவில் புதிய அணை கட்ட வேண்டும் என்பது கர்நாடகாவின் புதிய யோசனை அல்ல. அது அவர்களின் நீண்டநாள் ஆசை. இந்த கோரிக்கையை தமிழகம் ஆதி முதலே எதிர்த்து வந்திருக்கிறது. தமிழகத்தின் இத்தகைய அசையா கொள்கையை படுசூரணமாக்கும் வகையில் தமிழக அரசு வழக்கறிஞர் இப்படி ஒரு கருத்தை கூற, யார் அவருக்கு உரிமை தந்தது?

இப்படி ஒரு கருத்தை தமிழக அரசு சார்பில் தெரிவிக்கும் முன்பு, தமிழக அரசின் கருத்தை அந்த வழக்கறிஞர் கூறினாரா? முதல்வர் எடப்பாடி பழனிசாமிதானே பொதுப்பணித் துறை அமைச்சர். அவர் மேகதாது அணைக்கு ஒப்புதல் தெரிவிக்க வழக்கறிஞரிடம் கொடுத்தாரா? அப்படி அனுமதி கொடுக்கும் முன்பு அமைச்சரவையை கலந்து கொண்டாரா?

மேகதாதுவில் கர்நாடகா புதிய அணையைக் கட்டுவது என்பது மிகப் பெரிய பிரச்சினை. தமிழகத்தை பலமாக பாதிக்கின்ற பிரச்சினை. இப்படி ஒரு கருத்துக்கு ஒப்புதல் அளிக்கும் முன்பு, சட்டமன்றத்தையோ அல்லது தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையோ, தமிழக அரசு கலந்து பேசியிருக்க வேண்டாமா?

இவை ஏதும் நடைபெறாமல், தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் மேகதாது அணைக் கட்ட தமிழக அரசு சார்பில் ஒப்புக்கொண்டது தமிழகத்துக்கு செய்த மாபெரும் துரோகம். இப்படி ஒரு செய்தி வந்த பிறகும், இதுவரை பொதுப்பணித் துறையை வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காதது ஆச்சரியம்.

மேகதாதுவில் அணை கட்டினால், அந்த அணையை பராமரிக்கும் அதிகாரம் கர்நாடகத்திற்கு இருக்காது. இரு மாநிலத்திற்கும் பொதுவான நிர்வாகத்திடம் பொறுப்பு இருக்கும். இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு இருக்காது என்று உச்ச நீதிமன்றமே உறுதி தருகிறபோது, நாம் ஏன் பயப்பட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறலாம்.

அப்படி உச்ச நீதிமன்றம் கூறியபோது, தமிழகத்தின் சார்பில் என்ன சொல்லியிருக்க வேண்டும்? ஏற்கெனவே, காவிரி நடுவர்மன்றம் இறுதித் தீர்ப்பு கொடுத்த பின் அந்த தீர்ப்பை நிறைவேற்ற இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்று நாங்கள் இதே உச்ச நீதிமன்றத்தில்தான் முறையிட்டுக் கொண்டிருக்கிறோம். அதற்கோர் தீர்வு சொல்லுங்கள். அந்த மேலாண்மை வாரியம் எப்படி நியாயமாக செய்லபடுகிறது என்று பார்ப்போம். அந்த மேலாண்மை வாரியத்துக்கு கர்நாடகா எப்படி கீழ்படிந்து நடக்கிறது என்று பார்ப்போம். பிறகு, இந்த கோரிக்கையைப் பற்றி பேசலாம் என்றுதானே கூறியிருக்க வேண்டும்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கர்நாடகா அரசு கட்டுமாம். தண்ணீரைத் தேக்கி வைத்து, தமிழகத்துக்குத் தேவையான போது திறந்து விடுமாம். இதை நாம் நம்ப வேண்டுமாம். இதற்கு தமிழக அரசு ஒப்புதல் தருமாம். என்ன வேடிக்கை? எவ்வளவு பெரிய துரோகம்?

மேகதாது, ராசிமணல், ஒகனேக்கல் ஆகிய இந்தத் திட்டங்கள் குறித்து, நீண்ட நாட்களாக பேசிப்பேசி அலுத்துப் போய்விட்டது. காரணம், இந்த திட்டங்கள் நிறைவேறும்போது, மிக மிக ஜாக்கிரதையாக ஒப்பந்தம் போட வேண்டும். 'கரணம் தப்பினால் மரணம்' என்பார்களே, அப்படி ஒரு நிலை தமிழகத்துக்கு வந்துவிடும்.

மேகதாது அணைக் கட்டப்படுவதால்,

1. தமிழக நீர் பாசனத்திற்கு தேவையான நீரானது மோசமான முறையில் பாதிக்கப்படும்.

2. மேட்டூர் குகை - மேட்டூர் அணை - கீழ்மேட்டூர் அணை, 1 முதல் 4 வரை ஆகிய புனல் மின் நிலையங்கள் பாதிக்கப்படும்.

3. மேகதாது அணை கர்நாடகா பகுதியில் இருப்பதால், அதிலிருந்து வரும் நீரோட்டத்தை தமிழகம் எவ்வகையிலும் உறுதிப்படுத்த இயலாது.

4. மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த, இந்த அணையிலிருந்து நேரிடையாக நீர் பெறும் வாய்ப்பு உள்ளது. இதை தமிழகம் எவ்வகையிலும் தவிர்க்க இயலாது.

5. பெங்களூரு குடிநீருக்காக, காவிரியிலிருந்து 28 டி.எம்.சி. நீரைப் பயன்படுத்த, கர்நாடகா மின் கழகம் அறிக்கை அளிக்கிறது. பருவநிலை அல்லாத காலங்களில் மேகதாது அணையிலிருந்து 16.1 டி.எம்.சி. நீரை பயன்படுத்துவார்கள்.

இப்படி பல இடர்பாடுகள் மேகதாது அணையில் உள்ளது.

மேகதாது - ராசிமணல் - ஒகேனக்கல் - சிவசமுத்திரம் குறித்து தமிழகம் கொடுத்த பல திட்டங்களுக்கு கர்நாடக அரசு ஒப்புக் கொண்டது. இப்படி பல பிரச்சினைகளை ஆராய வேண்டிய நிலையில், திடீரென மேகதாது அணைக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்திருப்பது, தமிழகத்துக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.

தஞ்சை 'சகாரா'வாகும். காவிரி டெல்டா பகுதி காய்ந்து போன காடாகும். அதிமுக அரசின் இந்த செயலை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்'' என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x