Published : 29 Aug 2017 07:50 AM
Last Updated : 29 Aug 2017 07:50 AM
சென்னை மாநகராட்சியின் அரும்பாக்கம் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வருமான வரியை, வருமானவரித் துறையிடம் முறையாக செலுத்தப்படுவதில்லை என வாசகர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரும்பாக்கத்தைச் சேர்ந்த வாசகர் ஒருவர், ‘தி இந்து’ உங்கள் குரல் சேவையை தொடர்புகொண்டு தெரிவித்ததாவது:
சென்னை அரும்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் சம்பளத்தில் இருந்து, கடந்த ஆண்டுக்கான வருமான வரி சுமார் ரூ.42 ஆயிரம் வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் வருமான வரித்துறை இணையதளத்தில் படிவம் 26ஏ-வை பார்த்தபோது அதில், மாநகராட்சி நிர்வாகம், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வரித்தொகையை செலுத்தவில்லை என காட்டுகிறது.
இதனால் இந்த ஆசிரியர்களால் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியவில்லை. பிடித்தம் செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெறுவதிலும் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினை இப்பள்ளியில் மட்டும் தானா அல்லது அனைத்து பள்ளிகளிலும் இதே நிலைதானா என்பது தெரியவில்லை. இதனால் அப்பள்ளி ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கருவூல கணக்கு அலுவலகத்தில் கேட்டபோது, ‘‘ஆசிரியர்களைப் பொறுத்தவரை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள்தான் வருமானவரி பிடித்தம் செய்து வருமானவரித் துறையில் செலுத்தும் அலுவலர் ஆவார்.
நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் அந்த பகுதிக்கான உதவி கல்வி அலுவலர் தான் பொறுப்பு அதிகாரி. அவரிடம் தான் கேட்க வேண்டும்’’ என்றனர்.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அப்படி ஏதேனும் பிரச்சினை இருந்தால், மாநகராட்சி கல்வித் துறையில் புகார் அளிக்கலாம். அது தொடர்பாக சம்பந்தப்பட்ட உதவி கல்வி அலுவலரிடமும், அரும்பாக்கம் நடுநிலைப் பள்ளியிலும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT