Published : 04 Aug 2017 07:23 PM
Last Updated : 04 Aug 2017 07:23 PM

தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்கு

தேடப்படும் நபராக தன்னை மத்திய அரசு அறிவி்த்துள்ளதை எதிர்த்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஆகஸ்டு 7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்று பெற்றுத் தருவதற்காக மொரிஷியஸ் நாட்டில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த சம்மனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதேபோல, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கப்பிரிவினரும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக அறிவித்து அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னை தேடப்படும் நபராக அறிவித்து மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.துரைசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனிவாசன் ஆஜராகி, ‘‘மனுதாரருக்கு எதிராக இப்படி ஒரு நோட்டீஸை மத்திய அரசு பிறப்பித்துள்ளதா?’ என்பதை உறுதிசெய்ய போதிய கால அவகாசம் தேவை’’ என்றார்.

அதேபோல, மனுதாரர் தரப்பிலும் மூத்த வழக்கறிஞர் ஆஜராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் ஆகஸ்டு 7-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x