Published : 09 Aug 2017 08:23 AM
Last Updated : 09 Aug 2017 08:23 AM
கதிராமங்கலம் போராட்டம் தொடர்பாக ஓஎன்ஜிசி நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 9 பேருக்கு ஜாமீன் வழங்கி தஞ்சை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. எனினும், அரசு தொடர்ந்த வழக்கில் ஜாமீன் மனு நிலுவையில் உள்ளதால் அவர்கள் தொடர்ந்து சிறையில் உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக கடந்த ஜூன் 30-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து, திருவிடைமருதூர் வட்டாட்சியர், ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் தனித் தனிப் புகார்கள் அளிக்கப்பட்டன.
அதன்பேரில், பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை பந்தநல்லூர் போலீஸார் கைது செய்தனர். 10 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கோரி கடந்த மாதம் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் 2 முறை தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட ஜாமீன் மனுவை ஏற்ற நீதிமன்றம், பேராசிரியர் ஜெயராமனுக்கு ஜூலை 30-ம் தேதி ஜாமீன் வழங்கியது. மற்ற 9 பேருக்கும் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், 9 பேருக்கும் நேற்று ஜாமீன் வழங்கியது.
ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மட்டுமே தற்போது 10 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அரசு தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றக் கிளையில் உள்ள 8 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பும், தஞ்சாவூர் நீதிமன்றத்தில் உள்ள 2 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தும், மற்றொரு வழக்கில் ஜாமீன் கிடைக்காததால், அவர்கள் சிறையிலேயே உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT