Published : 29 Aug 2017 12:12 PM
Last Updated : 29 Aug 2017 12:12 PM
அதிமுக அரசு காக்கப்படவேண்டும் அதே நேரத்தில் டிடிவி தினகரனை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி இரையாகி விடக்கூடாது என்று தனியரசு எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் பேட்டி அளித்தனர்.
இதில் தனியரசு எம்.எல்.ஏ கூறியதாவது:
இப்போது உள்ள அசாதாரண நிலையில் அதிமுக அரசை ஆதரிக்கிற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதே சமயத்தில் கட்சி வலிமை, ஆட்சி வலிமை என்கிற சூழ்நிலையை உருவாக்க அனைவரும் முன் வரவேண்டும்.
தற்போதைய நிலவரம் குறித்து மூன்று பேரும் கலந்து ஆலோசித்தோம். மத்தியில் உள்ள பாஜக அரசின் அழுத்தத்திற்கு இரையாகி விட கூடாது. திராவிட பாரம்பரியம் காக்க தொடர்ந்து போராட வேண்டும்.
ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக டிடிவி தினகரன் தரப்பை நிராகரிக்கும் கோரிக்கைக்கு எடப்பாடி இரையாகிவிடக்கூடாது.
மகத்தான மக்கள் பேரியக்கத்தின் ஆட்சி 5 ஆண்டுகள் நடக்க வேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் டிடிவி தரப்பை அழைத்து பேசி அவர்கள் தரப்புக்கு கட்சியில், ஆட்சியில் இடம் தர வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆட்சியை காப்பாற்ற அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆழமாக விவாதித்து முடிவெடுப்போம். இவ்வாறு தனியரசு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT