Published : 27 Jul 2017 08:47 AM
Last Updated : 27 Jul 2017 08:47 AM

திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி திமுக இன்று நடத்தும் மனித சங்கிலிப் போராட்டத்துக்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக் கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, திமுக போராட்டத்துக்கு எதிராக நேற்று தொடரப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெறத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இன்று (ஜூலை 27) மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. ஏற்கெனவே நீட் தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அரசியல் உள்நோக்கத்தோடு திமுக நடத்தும் இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடு தலை சிறுத்தைகள் உள்ளிட்ட பிற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே திமுக நடத்தவுள்ள மனிதசங்கிலிப் போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக எடுத்து விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் சத்தியமூர்த்தி என்பவர் தலைமை நீதிபதி முன்பாக முறையீடு செய்தார்.

அதன்படி இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பாக நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் சி.மணிசங்கர், ‘‘திமுகவின் மனித சங்கிலி போராட்டத்துக்கு இதுவரை போலீஸ் தரப்பில் எவ்வித அனுமதியும் தரப்படவில்லை. அதற்கு அனுமதி மறுத்து கடந்த ஜூலை 25-ம் தேதியே போலீஸ் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘திமுகவின் இந்த போராட்டத் துக்கு போலீஸ் ஏற்கெனவே அனுமதி மறுத்துள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஏதேனும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேநேரம் ஒரு கோரிக்கையை வலியுறுத்தி அமைதியான முறையில் சட்டம் ஒழுங்குக்கு பிரச்சினை இல்லாமல் போராட்டம் நடத்துவது என்பது ஜனநாயக உரிமையாக இருக்கும்போது அதை எப்படி தடை செய்ய முடியும். எனவே இந்த மனுவை இந்த சூழலில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள முடியாது. அனுமானத்தின் அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவி்ட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x