Published : 26 Jul 2017 12:37 PM
Last Updated : 26 Jul 2017 12:37 PM
நீட் தேர்விலிருந்து முழு விலக்கு பெறுவதே தமிழக அரசின் கொள்கை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,''நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு தாமதமின்றி செயல்படுகிறது. தேர்விலிருந்து முழு விலக்கு பெறுவதே தமிழக அரசின் கொள்கை. எல்லா மாநிலமும் நீட் தேர்வை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், தமிழக அரசு நீட் தேர்வு வேண்டாம் என்பதில் உறுதியாக இருப்பதோடு, அதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற மத்திய அரசிடம் தொடர்ந்து போராடி வருகிறது.
மத்திய அமைச்சர்களை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்காகவே தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டனர். பிரதமர் மோடியை சந்தித்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் சட்ட சிக்கல்கள் உள்ளன. அதனை சீர்செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு பரிசீலிப்பதாகக் கூறியுள்ளது. தமிழகத்துக்கு சாதகமாக விலக்கு அளிக்க சில கூடுதல் விவரங்களைக் கேட்டுள்ளது. அவற்றை அளிப்பதற்காக தமிழக தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்ந்து தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
நல்ல தீர்வு வரும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம். இதில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படவில்லை'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT