Published : 30 Jul 2017 10:00 AM
Last Updated : 30 Jul 2017 10:00 AM

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுகேஷின் ஜாமீன் மனு 4-ம் முறையாக தள்ளுபடி

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் 4-வது முறையாக தள்ளுபடி செய்தது.

அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன், இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணை யத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும், இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி, டெல்லியில் ஓட்டலில் தங்கி யிருந்த சுகேஷ் சந்திரசேகரை கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி கைது செய்தனர். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து டிடிவி. தினகரனையும், அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவையும் ஏப்ரல் 25-ம் தேதி டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். லஞ்ச பணத்தை பரிமாற்றம் செய்ய ஹவாலா தரகராக செயல்பட்ட நரேஷ் என்ற நாதுசிங், லலித்குமார் பாபு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், டிடிவி. தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோருக்கு ஜூன் 1-ம் தேதியும், நரேஷ், லலித்குமார் பாபு ஆகியோருக்கு ஜூன் 6-ம் தேதியும் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட சுகேஷுக்கு மட்டுமே இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. மே 22-ம் தேதி, ஜூன் 9-ம் தேதி, ஜூன் 26-ம் தேதி என 3 முறை சுகேஷின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், 4-வது முறையாக சுகேஷின் வழக்கறிஞர் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி, மீண்டும் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x