Published : 06 Jul 2017 12:16 PM
Last Updated : 06 Jul 2017 12:16 PM

திரைத்துறைக்கு கேளிக்கை வரி விதிப்பு ஏற்க முடியாது: ஸ்டாலின்

திரைத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை ஏற்க முடியாது என்று எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தின்போது ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.

இதுகுறித்து ஸ்டாலின், "திரைத்துறைக்கு கேளிக்கை வரி விதிப்பை ஏற்க முடியாது. கேரளாவில் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்தவுடன் திரைத்துறையினரின் வேண்டுகோளை ஏற்று கேளிக்கை வரியை கேரள அரசு ரத்து செய்தது. அதுபோல் தமிழக அரசும் கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "திரைத்துறைக்கு விதிக்கப்பட்டுள்ளதை இரட்டை வரியாக கருத முடியாது. ஜிஎஸ்டி அமல்படுத்தவதற்கு முன்னதாகவே கேளிக்கை வரி திரைத்துறையிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

நாடு முழுவதும் ஜூலை 1 -ம் தேதி முதல் மத்திய அரசு அறிவித்த ஜிஎஸ்டி அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் திரைப்படங்களுக்கு ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என இரண்டுமே அமலில் உள்ளது.

இந்த இரட்டை வரி விதிப்பு முறையை எதிர்த்து திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நான்காவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

ஸ்டாலினை நலம் விசாரித்த முதல்வர்

கண்புரை அறுவைச் சிகிச்சை முடிந்த பிறகு சட்டப்பேரவைக்கு வருகை புரிந்த எதிர்க் கட்சி தலைவர் ஸ்டாலினின் உடல் நலம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நலம் விசாரித்தார். அமைச்சர்கள் சிலரும் நலம் விசாரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x