Published : 18 Jul 2017 10:29 AM
Last Updated : 18 Jul 2017 10:29 AM

வளரட்டும் இவரின் வலைதள சேவை

சமூக ஊடகங்களில் எதைப்பற்றி எல் லாமோ விவாதிக்கிறார்கள். ஆனால், வா.மணிகண்டன் உபயோகமாய் சாதிக்கிறார். வலைதளத்தில் எழுதி, ஏழைகளின் கல்வி, மருத்துவ சேவைக்காக மூன்று ஆண்டுகளில் கோடி ரூபாய்க்கு உதவியிருக்கிறார் இந்தச் சாமானியர்!

கோபி அருகே கரட்டடிபாளையத்தைச் சேர்ந்த மணிகண்டன், பெங்களூருவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். ஆரம்பத்தில் வலைதளம் ஒன்றில் எழுதி வந்தார். ஒருமுறை, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை மாணவர் ஒருவர் ரோபோ ஒன்றைத் தயாரித்தார். அதுதொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்ள அவர் ஜப்பான் செல்ல வேண்டும். பணம் இல்லாததால் அந்தப் பயணம் தடைபடும் சூழல்.

பயமும் வந்துவிட்டது

இதை அறிந்த மணிகண்டன், தனது வலைதளத்தில் இதுபற்றி எழுதினார். ஓரிரு நாளிலேயே அந்த மாண வனின் வங்கிக் கணக்கில் ரூ.80 ஆயிரம் குவிந்தது. இதுபோல், 200-க்கு 199.25 கட் ஆஃப் மதிப்பெண் இருந்தும், ஏழ்மை காரணமாக மேலே படிக்கமுடியாத சலவைத் தொழிலாளியின் மகள் குறித்தும் எழுதினார் சில மணி நேரங்களிலேயே ரூ.1.30 லட்சம் குவிந்தது. ஆச்சரியத்தில் மூழ்கினார் மணிகண்டன்.

வா.மணிகண்டன்

“ஆச்சரியம் மட்டுமல்ல.. பயமும் வந்துவிட்டது. இது பொதுப் பணம். உரியவர்களுக்குப் பயன்பட வேண்டும். ஆனால், நேரடியாக பயனாளிகளுக்குப் பணம் சேரும்படி செய்ததில் பல சங்கடங்கள் ஏற்பட்டன. சிலருக்கு தேவைக்கும் அதிகமாக பணம் குவிந்தது. அந்தப் பணம் இருந்தால் மேலும் இருவருக்கு உதவலாம். அதனால்,

கடந்த 2014-ல் தொடங்கியதுதான் நிசப்தம் அறக்கட்டளை. நிதியுதவி அளிப்பவர்கள் அனைவருமே ‘நிசப்தம்.காம்’ என்கிற வலைதளத்தில் என்னைத் தொடரும் எனது வாசகர்கள் மட்டுமே. என்னைச் சுற்றி நடப்பவை, என்னைப்

பாதித்தவை உள்ளிட்ட அனுபவங்களையே வலை தளத்தில் எழுதுகிறேன்.” என்கிறார் மணிகண்டன்.

அறக்கட்டளை தொடங்கிய மூன்று ஆண்டுகளில் தனி நபராக மணிகண்டன் செய்திருக்கும் உதவிகள் மலைக்க வைக்கின்றன. இதுவரைக்கும் இவர் செய் திருக்கும் உதவிகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாயைத் தொடுகிறது. இதற்காக இவரது மெனக்கெடல் மிக அதிகம். வார விடுமுறை நாள்களில்கூட இவர் வீடு தங்கு வதில்லை. ஏதாவது ஓர் ஊரில் ஓடிக்கொண்டிருப்பார். வெள்ளிக்கிழமை இரவு அரசுப் பேருந்தில் புறப்பட்டு, பயனாளிகளை நேரில் சந்திக்கிறார். அவர்களைப் பற்றிய உண்மையான விவரங்களை உறுதி செய்துகொண்ட பின்னரே அவர்களுக்கான உதவிகளைச் செய்கிறார். கடலூர், சென்னை மழை வெள்ளத்தின்போது சுமார் ஆயிரம் குடும்பங்களுக்கு மளிகை சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுத்தார். வெள் ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட 300 குடும்பங்களுக்கு ரூ.60 லட்சம் செலவில், அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டுக் கொடுத்தார் மணிகண்டன்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் நான்கு பள்ளி களுக்கு தலா ரூ.84 ஆயிரம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைத்துக் கொடுத்ததுடன், 27 பள்ளி நூலகங்க ளுக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கு புத்தகங்களையும் வாங்கித் தந்திருக்கிறார் இவர். சிகப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்ட ‘தலசீமியா’ நோய் பாதிப்புக்குள்ளான மூன்று குழந்தைகளின் சிகிச்சைக்கு உதவியிருக்கிறார். இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை களுக்காக இவர் உதவிய தொகை சுமார் ரூ.30 லட்சத்தை நெருங்குகிறது.

சிறு தவறுகூட ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, காசோலை மற்றும் இணைய வழி பரிமாற்றங்கள் மூலம்

மட்டுமே நிதியுதவிகளை ஏற்கிறார். அதேபோல், ஒவ்வொரு மாதமும் அறக்கட்டளையின் வரவு செலவு விவரங்களைத் தனது வலைதளத்தில் வெளியிடுகிறார்.

எளிமைப் பயணம்

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் குடும்பப் பொறுப்புகளுடன் பொருளாதாரச் சுமைகளும் இருக்கின்றன. இதனால் பெரும்பாலும், கிடைக்கும் இடம் அல்லது பேருந்து நிலையத்தில் தங்கிக் கொள்வது, பொதுசுகாதார மையங்களில் குளித்துக் கிளம்புவது என்று மிக எளிமையாக தனது சேவைப் பயணத்தைத் தொடர்கிறார்.

வலைதளத்தை பயனுள்ள விதத்தில் இப்படியும் பயன்படுத்தமுடியும் என்பதை மணிகண்டனைப் பார்த்தாவது வெட்டிவிவாதம் நடத்து பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்த்துக்கள் மணிகண்டன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x