Published : 24 Jul 2017 09:02 AM
Last Updated : 24 Jul 2017 09:02 AM

இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்ட 17 கிலோ தங்கம் பறிமுதல்: ராமநாதபுரத்தில் 3 பேர் கைது

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 17 கிலோ தங்கம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப் பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியில் தங்கம் கடத்தப்படுவதாக, தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து நேற்று முன்தினம் இரவு சாயல்குடி வந்த வருவாய் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள், கடற்கரைச் சாலையில் வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்த 11.25 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த 3 பேரையும் கைது செய்தனர்.

அதேபோல் நேற்று முன்தினம் இரவு தொண்டி - மதுரை சாலையில் சென்ற காரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விரட்டிச் சென்றனர். அப்போது காரில் இருந்தவர்கள், பார்சலை சாலையில் தூக்கியெறிந்து விட்டு தப்பிச்சென்றனர். பார்சலை எடுத்த அதிகாரிகள் அதில் இருந்த 6 கிலோ தங்கத்தை கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.5 கோடியாகும். இவை இலங்கையில் இருந்து கடல் வழியாக படகு மூலம் கடத்திவரப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x