Published : 24 Sep 2013 02:24 PM
Last Updated : 24 Sep 2013 02:24 PM

சென்னையில் 9-வது நாளாக போராட்டம்: பார்வையற்ற பட்டதாரிகள் கைது

ஆசிரியர் நியமனத்தில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் 9-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற பட்டதாரிகள் கைது செய்யப்பட்டனர்.

முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க நடவடிக்கை வேண்டும்; என்பது உள்ளிட்ட தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

பார்வையற்ற பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் பார்வையற்ற பட்டதாரிகள் கடந்த 9 நாட்களாக சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சென்னையில் இன்று மாற்றுத்திறனாளி ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பார்வையற்ற பட்டதாரிகளை போலீஸார் கைது செய்தனர். பாதுகாப்பு உபகரணங்களை ஒப்படைக்கும் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட முயற்சித்தனர்.

முன்னதாக, அமைச்சர் வளர்மதியுடன் 2-வது கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்ததால், அவர்களது போராட்டம் வலுத்துள்ளது.

இதனிடையே, சென்னையில் உண்ணாவிரதம் இருந்துவரும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் ஒன்பது பேரில் இருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. உண்ணாவிரம் இருந்துவரும் அவர்கள், வலுக்கட்டாயமாக சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பெற்றுக்கொள்ள மறுத்து, அவர்கள் மருத்துவமனையிலும் போராட்டத்தை தொடர்கின்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x