Published : 13 Mar 2017 02:08 PM
Last Updated : 13 Mar 2017 02:08 PM
அனைத்து ரேஷன் பொருட்களும் மக்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் திமுக போராட்டம் நடத்துவது தேவையற்றது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வறட்சியை எதிர் கொள்ளவும், நீர்வள ஆதார மேலாண்மைக்காகவும் பயனீட்டாளர்கள் பங்களிப்புடன் நீர் நிலைகளைப் புனரமைக்கும் ‘குடிமராமத்து’ திட்டத்துக்கு புத்துணர்வு அளிக்க அரசு உத்தரவிட்டது. இதன்படி, இந்த ஆண்டு 30 மாவட்டங்களில் ரூ.100 கோடி மதிப்பிலான 1,519 குடிமராமத்து திட்டப்பணிகள் இன்று தொடங்கப்பட்டன.
தொடக்க நிகழ்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் உள்ள ஏரியை சீரமைக்கும் பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "20 ஆயிரம் டன் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு, விநியோகிக்கப்பட்டு வருகிறது. அனைத்து ரேஷன் பொருட்களும் மக்களுக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, ரேஷன் கடைகளில் திமுக போராட்டம் நடத்துவது தேவையற்றது'' என்று தெரிவித்தார்.
அவர் மேலும் கூறும்போது, "குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. விவசாயத்துக்கு நீர் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT