Published : 29 Jan 2017 05:56 PM
Last Updated : 29 Jan 2017 05:56 PM

நெடுஞ்சாலையில் கட்டிய கோயில் இடித்து அகற்றம்: 30 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை பைபாஸ் சாலையில் நடவடிக்கை

மதுரை பைபாஸ் சாலையில் இருந்த கருப்பணசாமி கோயில், அதன் எதிரே இருந்த வழக்கறிஞர் அலுவலகத்தை நேற்று போலீஸ் பாதுகாப்புடன் சென்று நெடுஞ் சாலைத் துறை அதிகாரிகள் இடித்து அகற்றியதால் பதற்றம் ஏற்பட்டது.

மதுரை நகரில் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலைக ளில் காளவாசல்-பழங்காநத்தம் பை-பாஸ் சாலை முதன்மையானது. இந்த சாலை, ஆரம்பத்தில் வாரணாசி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையாக இருந்தது. நான்குவழி சாலை புதிதாக அமைக்கப்பட்டதும், இந்தச் சாலை மாநில நெடுஞ்சாலைத் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பின், இந்த சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. குறிப்பாக பழங்காநத்தம்- காளவாசல் இடையே சாலை அகலமாகியும் சர்வீஸ் சாலைக்கும், பைபாஸ் சாலைக்கும் இடையே கோயில், தனியார் நிறுவன கட்டிடங்கள் அதிகரிப்பால் சர்வீஸ் ரோடுகளை மக்களால் பயன்படுத்த முடிய வில்லை. சர்வீஸ் ரோடு அமைந் துள்ள பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் உள்ளன. இங்கு வரும் வாடிக்கையாளர்கள், வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்துகின்றனர்.

இந்த சர்வீஸ் சாலையில் கட்டப்பட்ட கருப்பணசாமி கோயிலும், ஒரு வழக்கறிஞர் அலுவலகமும் பிரதான ஆக்கிர மிப்பாக இருந்தன. இந்த கோயிலில் வாரந்தோறும் பூஜைகள், நேர்த்திக்கடன் செலுத்த ஏராளமான பக்தர்கள் வருவர். விரதமிருந்து கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், வெளியூர் செல்பவர்கள் இந்த கருப்பணசாமி கோயிலில் தேங்காய், பூசணிக்காய் உடைத்துவிட்டுச் செல்வர். இதனால் அப்பகுதியில் சாலை முழுவதும் தேங்காய் சிதறல்களும், பூசணிக்காய்களும் உடைபட்டுக் கிடக்கும். இதில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் காயமடைந்தனர். இதையடுத்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த ஆண்டு நவ. 9-ம் தேதி பைபாஸ் சாலையில் நெரிசல் ஏற்பட காரணமான கருப்பணசாமி கோயிலையும், வழக்கறிஞர் அலுவலகத்தையும் இடித்து அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கோயில் நிர்வாகத்துக்கும், வழக்கறிஞர் அலுவலகத்துக்கும் அவர்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ் வழங்கியது. ஆனால், அதன்பிறகும் ஆக்கிரமிப் பாளர்கள் கோயிலையும், அலுவல கத்தையும் அகற்ற முன்வரவில்லை. அதிருப்தி அடைந்த உயர் நீதிமன்றம் நெடுஞ்சாலைத் துறைக்கு கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் அரசப்பன், உதவி கோட்டப் பொறியாளர் பாக்கியலட்சுமி, உதவி பொறியாளர் ரோகிணி மற்றும் அதிகாரிகள் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் கருப்பணசாமி கோயிலையும், அலுவலகத்தையும் அகற்ற சென்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் திரண்டதால் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, போலீஸார், அவர்களை அப்புறப்படுத்தி ஜேசிபி இயந்திரங்களை கொண்டு கோயிலை இடித்து அகற்றினர். அதிகாலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை கோயில், வழக்கறிஞர் அலுவலகம் இடித்து அகற்றப்பட்டன. கோயிலில் இருந்த கருப்பணசாமி சிலை, உண்டியல், மணியை அப்புறப்படுத்தி, மாவட்ட கருவூலத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதனால், கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு பைபாஸ் சாலைக்கு தற்போது விமோசனம் கிடைத்துள்ளது.

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் பழங்காநத்தம் ரயில்வே மேம்பாலத் தின் இருபக்கமும் அகலமான சர்வீஸ் ரோடு அமைக்க முடியும். இதனால், விபத்துகளும், நெரிசலும் குறை யும். பழங்காநத்தம், நேரு நகர், எல்லீஸ் நகர் உள்ளிட்ட பைபாஸ் சாலையின் இருபுறமும் வசிக்கும் மக்கள் பயன் பெறு வர். அதனால், உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலை அமைத்து ஏற்கெனவே இருக்கும் சாலையுடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

3 முறை தள்ளிப்போன ஆக்கிரமிப்பு அகற்றம்

நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஒரு மாதமாகவே நெருக்கடியில் இருந்தோம். அவர்களே ஆக்கிரமிப்புகளை அகற்ற பல வாய்ப்புகளை கொடுத்தோம். ஆனால், நேற்றும் அவர்கள் ஒருநாள் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை தள்ளிப்போடுங்கள் என்றனர். இதேபோல, அவர்கள் ஏற்கெனவே கூறியதால் 3 முறை ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், நேற்று போலீஸ் பாதுகாப்புடன் சென்று அகற்றினோம். இந்த நடவடிக்கையை அவசர கோலத்தில் எடுக்கவில்லை. நிதானமாக போதிய கால அவகாசம் கொடுத்துதான் மேற்கொண்டோம் என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x