Published : 13 Mar 2017 12:17 PM
Last Updated : 13 Mar 2017 12:17 PM
அரூர் அடுத்த சித்தேரி பகுதி பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் தேர்வுக்கு சென்று வர போதிய பேருந்து வசதியின்றி தவிக்கின்றனர்.
தருமபுரி மாவட்டம் சித்தேரி மலை கிராம ஊராட்சியின் கீழ் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கல்வித் தேவைக்காக சித்தேரியில் அரசு சார்பில் உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. 25-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றும் இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் சுமார் 500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இங்கு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுத அரூர் பகுதியில் உள்ள தேர்வு மையங்களுக்குத் தான் செல்ல வேண்டும். இதற்காக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும்.
நடப்பு ஆண்டில் இந்த உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த 74 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு தேர்வையும், 60 மாணவ, மாணவியர் பிளஸ் 2 தேர்வையும் எழுது கின்றனர். பிளஸ் 2 தேர்வு எழுதுவோர் அரூர் மையத்திற்கும், பத்தாம் வகுப்பு எழுதுவோர் கீரைப்பட்டி மையத்திற்கும் செல்கின்றனர். இந்நிலையில் தேர்வுக்கு சென்று வர போதிய பேருந்து வசதியின்றி இந்த மாணவ, மாணவியர் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டபோதும் மலைப்பாதை என்பதால் அதிக அளவில் ஆட்களை ஏற்ற முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, கீரைப்பட்டி மையத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் சித்தேரி பகுதி மாணவ, மாணவியர் தேர்வு முடித்து விடுதிக்கு திரும்ப போதிய பேருந்து வசதி இல்லை. இதனால், நீண்ட நேரம் காத்திருந்து பேருந்தில் சென்றாலும், நடந்து சென்றாலும் விடுதியை அடைய சுமார் 3 மணி நேரம் கால விரயம் ஏற்படுகிறது.
தேர்வு நேரத்தில் இதுபோன்று கால விரயமும், உடல் அலைச்சல் மற்றும் மன உளைச்சலும் ஏற்படுவதால் அடுத்தடுத்த தேர்வுகளுக்கு படிப்பதில் சிரமம் ஏற்படுவதாக அப்பகுதி மாணவ, மாணவியர் தெரிவித்துள்ளனர். எனவே, தேர்வு நாட்களில் சிரமமின்றி மாணவ, மாணவியர் சென்று வர போதிய பேருந்து வசதியை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டுமென அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT