Last Updated : 04 May, 2016 04:03 PM

 

Published : 04 May 2016 04:03 PM
Last Updated : 04 May 2016 04:03 PM

கரூர் அன்புநாதனுக்கு நிபந்தனை முன்ஜாமீன்: திமுகவின் ஆட்சேபனை நிராகரிப்பு

வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வீட்டில் பணம் பதுங்கி வைத்திருந்தது தொடர்பான வழக்கில் கரூர் அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

கரூர் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் பி.அன்புநாதன். அதிமுகவைச் சேர்ந்த இவர், பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக கோடிக்கணக்கான பணத்தை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் பறக்கும்படைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து இவரது வீட்டில் ஏப். 22&ல் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது ரொக்கப்பணம், பணம் எண்ணும் இயந்திரம், கள்ள நோட்டை கண்டுபிடிக்கும் இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் வீடு அருகே நிறுத்தப்பட்டிருந்த போலி ஆம்புலன்ஸ் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து பறக்கும்படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் அன்புநாதன் மீது வேலாயுதம்பாளையம் போலீஸார் தேர்தல் நடத்தை விதி மீறல், அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் அன்புநாதன் தலைமறைவானார். இவரை கைது செய்ய வேண்டும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில் நேற்று நடைபெற்ற திமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று (செவ்வாய்க்கிழமை) வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் அன்புநாதன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். என் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் ரூ.10,33,820 பணம், வாக்காளர்கள் பட்டியலை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த ஆம்புலன்ஸ் எனக்கு சொந்தமானது அல்ல. நான் முறையாக வருமான வரி செலுத்தி வருகிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என அன்புநாதன் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. அன்புநாதன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ரமேஷ் வாதிட்டார். அரசு வழக்கறிஞர் ஏ.பி.பாலசுப்பிரமணியன் வாதிடும்போது, அன்புநாதன் மீதான வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதாக’ தெரிவித்தார்.

அப்போது அன்புநாதனுக்கு முன்ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் வீராகதிரவன் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அன்புநாதன் வீட்டில் ரூ.5 கோடிக்கும் அதிக பணம் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது. அது தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது எனக் கூறப்பட்டிருந்தது.

திமுகவின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் மறு உத்தரவு வரும்வரை வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணியளவில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x