Published : 23 Jan 2017 11:06 AM
Last Updated : 23 Jan 2017 11:06 AM

ஆதார் பதிவுக்கு கட்டணம் வசூலித்தால் சிறை: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய ஆதார் பதிவுக்கு பொதுமக்களிடம் கட்டணம் வசூலிப்பவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மையங்களில் புதிய ஆதார் பதிவு நடந்து வருகிறது. அவ்வாறு நடந்து வரும் புதிய ஆதார் பதிவுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.

ஆனால், தனி நபர்கள் சிலர் விரைவாக ஆதார் எண் பெற்றுத் தருவதாகக் கூறி பொது மக்களிடம் பணம் வசூலிப்பதாக தெரியவந்துள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் இத்தகைய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் விதிமுறைகளை வகுத்துள்ளது.

அவ்வாறு கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் மற்றும் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் ஆதார் எண்ணைப் பெற, நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை மட்டுமே அணுக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x