Last Updated : 04 Feb, 2017 03:16 PM

 

Published : 04 Feb 2017 03:16 PM
Last Updated : 04 Feb 2017 03:16 PM

கச்சா எண்ணெய் அகற்றும் தன்னார்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள்

எண்ணூரில் கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் கடல் சார் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு கச்சா எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொண்டு களத்தில் இறங்குவது அவசியமாகிறது எனக் கூறுகின்றனர் மருத்துவர்கள்.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28-ம் தேதி இரு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கப்பலிலிருந்த கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்தது. இதனால் கடலில் சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு எண்ணெய் படலம் பரவியது.

அவ்வாறு பரவிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் தங்களுக்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்படுகளை செய்துகொள்ள வேண்டும் என மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

கடலில் பரவியுள்ள கச்சா எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய சுய பாதுகாப்பு பற்றி முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனரும் தோல் நிபுணருமான இளங்கோவனிடம் 'தி இந்து' இணையதள செய்திப் பிரிவு கேட்டறிந்தது.

"பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது"

தன்னார்வலர்களுக்கு இளங்கோவன் கூறியதாவது , கச்சா எண்ணெயை வெறும் கைகளில் அகற்றுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வெறும் கைகளில் அள்ளும்போது கச்சா எண்ணெய் தோலில் நேரடியாக ஊடுருவினால், ஆயில் பாலிக்ளைடீசியே, ஒட்டு தரப்பான் போன்ற வியாதிகள் உண்டாகலாம்.

கைகளில் புண்கள் ஏற்படலாம். சரும நோய்கள் ஏற்படலாம்.

தோலில் எரிச்சல் உண்டாகலாம்.

கச்சா எண்ணெய் உள்ளுறுப்புகளில் சென்றால் மட்டுமே மிகப் பெரிய அளவிலான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. மற்றபடி பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது.

"கையுறையே போதும்"

தன்னார்வலர்கள் நல்ல அடர்த்தியான கையுறைகளை அணிந்து கொண்டாலே பாதுகாப்புக்கு போதுமானது. பிறகு கைகளை நன்கு சுத்தம் செய்து விட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முழு பொறுப்பும் அரசுக்கே..

சூழலியல் செயல்பாட்டாளர் சுந்தர்ராஜன் கூறும்போது, "என்னுடைய புரிதல்படி முழுவிவரம் தெரியாமல் தன்னார்வாலர்கள் களத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.

இது போன்ற தருணங்களில், இதற்கென சிறப்பு வல்லுனர்கள் இருப்பார்கள் அவர்கள் இதை கையாள்வது நல்லது என்றுதான் கூறுவேன். ஏனெனில் இது அரசு செய்ய வேண்டிய வேலை, தன்னார்வலர்கள் செய்ய வேண்டியது அல்ல. அரசாங்கம்தான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தன்னார்வலர்கள் அல்ல.

ஒருவேளை தன்னார்வலர்கள் வர விரும்பினால் முழு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கச்சா எண்ணெய் அகற்றுவதில் ஈடுபடலாம். அதற்காக வடிவமைக்கப்பட்ட கையுறைகள், ஆடைகள் அணிந்து அதிகப்படியான பாதுகாப்பு ஏற்பாடுடன் செல்ல வேண்டும். ஏனென்றால் நிறைய தன்னார்வலர்கள் கூடும்போது அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் கிடைக்குமா என்பது தெரியாது அல்லவா? எனவே வருவதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x