Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM

உதகை: மணல் தட்டுப்பாடு: நீலகிரியில் கட்டுமானப் பணிகள் நிறுத்தம்

நீலகிரி மாவட்டம், மலை காய்கறிகள் மற்றும் தேயிலையைத் தவிர, அனைத்து உணவு, கட்டுமானம் உள்ளிட்ட பொருட்களுக்கு சமவெளிப் பகுதிகளையே நம்பியுள்ளது.

இதனால், மாவட்டத்தில் அனைத்து பொருட்களின் விலையும் சமவெளிப்பகுதிகளை விட சற்று கூடுதலே. தாக்காளி, வெங்காயத்துக்கு மைசூரையும், அரிசிக்கு தஞ்சையையும், பிற காய்கறிகளுக்கு பிற மாவட்டங்களையும் நம்பியுள்ளது.

இதே போல கட்டுமானப் பொருட்களான மணலுக்கு கரூரையும், செங்கற்களுக்கு சென்னை, காஞ்சி மற்றும் கோவையையும், கம்பிகளுக்கு கோவையையும் நம்பியுள்ளது. இதனால், நீலகிரியில் வீடு கட்டினால் சமவெளிப்பகுதிகளை விட இரண்டு மடங்கு பணம் தேவை.

இந்நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தால், நீலகிரி பெரும்பாலானோர் வீடு கட்டுவது கனவாகி விட்டது. கட்டி முடிக்கப்பட்ட வீடுகளையே வாங்குகின்றனர்.

குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளாக மணலின் விலையேற்றம், நீலகிரி வாழ் மக்களின் ‘கனவு வீடு’ கனவாகவே மாறிவிட்டது.

ஒரு யூனிட் ரூ.3500க்கு விற்பனையான மணல், தற்போது ரூ.7600க்கு விற்கப்படுகிறது. ஒரு லோடு மணல் ரூ.23,500க்கு விற்கப்படுகிறது.

மணலை ஏற்றி வரும் லாரி வாடகை கரூரிலிருந்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை செல்கிறது. இதன் காரணமாக நீலகிரிக்கு ஒரு லோடு மணல் வர ரூ.30 ஆயிரம் தேவைப்படுகிறது.

தற்போது, மணல் தட்டுப்பாடு நிலவுவதால், மணல் குவாரிகளில், லாரிகள் 3 முதல் 4 நாட்கள் வரை காத்திருந்து, மணல் ஏற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிரசெர் பவுடர்

மணல் தட்டுப்பாடு நிலவுவதால், பலர் கட்டுமானங்களில் ஜல்லி தூளைப் பயன்படுத்துகின்றனர். அதிக மழை பெய்யும் நீலகிரி மாவட்டத்தில், கிரசெர் பவுடரில் கட்டுமானங்கள் செய்தால், கட்டுமானத்தில் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி விடும் என கட்டிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, மணல் தட்டுப்பாடு மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக, பல கட்டுமானத் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர்.

நீலகிரியில் கட்டிடத் தொழிலில் சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் பலர் வேலை இழந்துள்ளனர் என கட்டிடத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகி வாசு கூறினார்.

ஏற்கனவே வடமாநிலத்தினர் குறைந்த கூலிக்கு, கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வருவதால், மாவட்டத்தில் உள்ள கட்டிடத் தொழிலாளிகள் பலர், வேலை இழந்து வரும் நிலையில், கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தால், கட்டுமானத் தொழில் முடங்கியதால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் வாசு.

மணல் தட்டுப்பாடு நிலவுவதால், பல கட்டிடங்கள் பாதிலேயே நிற்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x