Published : 28 Jan 2014 03:44 PM
Last Updated : 28 Jan 2014 03:44 PM
தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்களுக்கு 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், இந்தத் தேர்தலில் வாக்குப் பதிவு நடைபெறாது.
தமிழகத்தில் 6 எம்.பி. பதவிகளுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் 7-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
அதிமுக சார்பில் 4 வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் சார்பில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த 5 வேட்பாளர்களின் வெற்றி உறுதியானது.
மீதமுள்ள ஒரு இடத்துக்கு 23 எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட திமுக, திருச்சி சிவாவை நிறுத்தியது. அவருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்களும், புதிய தமிழகம் கட்சியின் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ.வும் ஆதரவு அளித்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.
இதனால், களத்தில் உள்ள 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
முன்னதாக, 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தவிர, 21 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட தேமுதிகவும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அக்கட்சி சார்பில் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் வேட்பாளராக்கப்படலாம் என்றும் பேச்சுகள் எழுந்தன. திமுகவுடன் தேமுதிக கூட்டணி சேரும் பட்சத்தில் திமுக வேட்பாளர் சிவாவை வாபஸ் பெறச் செய்துவிட்டு, தேமுதிகவுக்கு திமுக ஆதரவளிக்கலாம் என்று பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT