Published : 17 Mar 2014 07:48 PM
Last Updated : 17 Mar 2014 07:48 PM

இலங்கையில் விடுவிக்கப்பட்ட 24 தமிழக மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்

இலங்கை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேர் ராமேஸ்வரம் மீன்பிடித்தளத்திற்கு இன்று (திங்கள்கிழமை) மாலை வந்தடைந்தனர்.

தமிழக - இலங்கை இருநாட்டு மீனவர்களின் முதலாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி 27 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு 172 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் கொழும்பில் மார்ச் 13 அன்று நடக்க இருக்கும் பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கை சிறைச்சாலைகளில் வாடும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தினார்.

ஆனால், மார்ச் 12 செவ்வாய்கிழமை காலை வரை இலங்கை அரசிடமிருந்து மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக எந்த பதிலும் வரவில்லை. இதனால் இரு நாட்டு மீனவர்களின் பேச்சு வார்த்தை தள்ளிப்போனது.

இதனை தொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சார்ந்த 15 நாட்டுப்படகு மீனவர்களையும், ராமேஸ்வரத்தை சார்ந்த 9 விசைப்படகு மீனவர்கள் என 24 தமிழக மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் நீதிமன்ற காவல் முடியும் முன்னரே நீதிபதி ஆனந்தி கனகரெத்தினம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இலங்கை நீதித்துறை பரிந்துரையின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் 24 பேரையும் நீதிபதி ஆனந்தி கனகரெத்தினம் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரும் பேச்சாலையில் இந்திய துணை தூதரக அதிகாரிகள் பொறுப்பில் தங்க வைக்கப்பட்டனர்.

பின்னர் இன்று காலை 9 மணியளவில் தலைமன்னாரில் உள்ள இலங்கை கடற்படை தளத்திலிருந்து கிளம்பி 12 மணியளவில் இலங்கை கடற்படையினர் 24 மீனவர்களையும் சர்வதேச நீர்பரப்பில் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். மீனவர்கள் 24 பேரும் தங்களின் படகுகளுடன் திங்கட்கிழமை மாலை ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திற்கு வந்தடைந்தனர்.

தாயகம் திரும்பிய ராமேஸ்வரத்தை சார்ந்த விசைப்படகு மீனவர் ஜெயராமன் நமது செய்தியாளரிடம் கூறும்போது, "மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் அனுராதபுரம் சிறைச்சாலையில் அடைத்தனர். எங்களை அடைக்கப்பட்டிருந்து அறை மிகவும் குறுகியதாக ஒருவர் திரும்பி கூட படுக்கு முடியாத அளவிற்கு இருந்தது.

மேலும் எங்களுக்கு வழக்கப்பட்ட உணவில் வண்டுகள் செத்துக் கிடந்தன. நாங்கள் அதனை சாப்பிட மறுக்கவே பின்னர் எங்களுக்கு பிரட் வழங்கப்பட்டது. சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்த பின்னர் கடந்த நான்கு தினங்களும் இந்திய தூதரக அதிகாரிகள் பொறுப்பில் இருந்தோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x