Published : 06 May 2017 01:53 PM
Last Updated : 06 May 2017 01:53 PM

நடிகர் சங்க கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை தி.நகரில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணை ஜூன் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை தி.நகரில் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தில் 33 அடி பொது சாலைப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்புவாசிகள் சார்பில் ஸ்ரீரங்கன் என்ற வழக்கறிஞர் ஏற்கெனவே சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸில் மனு கொடுத்திருந்தார். மேலும், இது தொடர்பாக அண்ணாமலை மற்றும் ஸ்ரீரங்கன் இருவரும் இணைந்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் என்.கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகிய நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் நடிகர் சங்க கட்டிடம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக கே.இளங்கோவனை நியமித்தனர்.

மேலும் நீதிபதிகள், ''நடிகர் சங்க கட்டிடம் அமைய உள்ள இடத்தை வழக்கறிஞர் ஆணையர் கே.இளங்கோவன் ஆய்வு செய்ய வேண்டும். நடிகர் சங்கமும், மனுதாரரும் இணைந்து ஆணையருக்கு ரூ.1 லட்சம் ஊதியம் வழங்க வேண்டும்.

வழக்கறிஞர் கே.இளங்கோவன் கட்டிடம் அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்து மே 29-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆணையர் ஆய்வறிக்கை வழங்கும் வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை ஜூன் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது'' என்று உத்தரவிட்டனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x