Published : 08 Dec 2013 06:02 PM
Last Updated : 08 Dec 2013 06:02 PM
வாக்காளர்களுக்கும் ஏராளமாக பணம் வழங்கி, அ.தி.மு.க. பெற்ற வெற்றி இது என்று இடைத்தேர்தல் தேர்தல் முடிவு குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தியில், "திமுகவுக்கு வாக்களித்த தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
இந்த இடைத் தேர்தலில் ஆளுங்கட்சியின் ஆதரவோடும், பக்க பலத்தோடும் தலை விரித்தாடிய வன்முறை செயல்களுக்கும், தேர்தல் ஆணையம் என்ற ஒரு அமைப்பு இருப்பதைப் பற்றியே கவலைப்படாமல் தேர்தலுக்கு என்று வகுக்கப்பட்ட விதிமுறைகளையெல்லாம் காலில் போட்டு மிதிக்கப்பட்டது.
அப்படி நடைபெற்ற ஜனநாயக விரோதச் செயல்களை கண்டும் காணாமல்; நாம் சுட்டிக் காட்டியும் கூட, தட்டிக் கேட்க முன்வராமல்; தேர்தல் விதிமுறைகளை மீறிய ஜனநாயக விரோதச் செயல்களுக்கு தாராளமாக வழி விட்டு; வாக்காளர்களுக்கும் ஏராளமாக பணம் வழங்கி, அ.தி.மு.க. பெற்ற வெற்றி இது.
அதனால் அவர்கள் வெளிப்படையாக வெற்றி முழக்கம் செய்தாலும், இந்த வெற்றி என்ன விலை கொடுத்து வாங்கப்பட்டது என்பதை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது.
நமது கழக உடன்பிறப்புகள் ஆற்றிய பணிகளுக்கு பயன் கிடைக்கவில்லையே என்ற வருந்திடாமல், இது போன்ற தோல்விகளைத் தான் நம் எதிர்கால வெற்றிக்கு ஏணிப்படிகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற அறிவுரையினையும், ஆறுதலையும் கூறி, தேர்தல் களத்தில் ஓயாமல் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதோடு, இந்தச் சூழலிலும் கழகத்திற்கு வாக்களித்த தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT