Published : 03 Nov 2014 01:10 PM
Last Updated : 03 Nov 2014 01:10 PM

ஜி.கே.வாசன் வெளியேறுவதால் காங்கிரஸ் நொடித்துவிடாது: இளங்கோவன்

ஜி.கே.வாசன் 'எங்கிருந்தாலும் வாழ்க' என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த வேளையில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், "காங்கிரஸ் குடும்பத்தை விட்டு ஜி.கே.வாசன் வெளியேறுவது சரியல்ல. இருப்பினும் அவர் அந்த முடிவில் உறுதியாக இருந்தால் 'எங்கிருந்தாலும் வாழ்க' என வாழ்த்துவதைத் தவிர வேறு வழியில்லை" என தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறும்போது, "காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பம், அந்தக் குடும்பத்தில் இருந்து யாரும் வெளியேற வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

எங்கள் உணர்வையும், உள்ளத்தையும் காயப்படுத்தும் வகையில் ஜி.கே.வாசன் வெளியேறினாலும் காங்கிரஸ் குடும்பம் வருத்தப்படுமே தவிர நொடித்துவிடாது.

4 லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் உணர்வை மதிக்காமல், நாலு பேர் பேச்சைக் கேட்டு வாசன் செயல்படுகிறார். நால்வர் அணி எப்போதுமே வெற்றி பெற்றது கிடையாது என்பதை பாசத்துக்குரிய ஜி.கே.வாசன் உணர வேண்டும்.

ஜி.கே.வாசன் இந்த இயக்கத்தின் செல்லப்பிள்ளை. அவர் இப்போது வழி தவறி செல்கிறார். எங்கு சென்றாலும், ஒரு நாளைக்கு அவர் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பிவர வேண்டும். மூப்பனார் மீது இருக்கும் மரியாதை, குரு பக்தியால், காங்கிரஸை விட்டு வாசன் பிரிந்து செல்லக்கூடாது என வேண்டுகிறேன்" என்றார் இளங்கோவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x