Published : 22 Feb 2017 07:12 PM
Last Updated : 22 Feb 2017 07:12 PM
கொல்லைப்புறமாக ஆட்சியைக் கைப்பற்ற திமுக நினைக்கவில்லை. மக்களைச் சந்தித்து அவர்களது ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கவே திமுக விரும்புகிறது என்று ஸ்டாலின் பேசினார்.
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நாளில் திமுக எம்எல்ஏ-க்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருச்சியில் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்ற திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியது:
''ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை முறையாக விசாரணை நடத்தினால், சசிகலா பெங்களூரு சிறையில் 4 ஆண்டுகள் அல்ல, ஆயுள் கைதியாக இருக்க வேண்டிய சூழல் வரும்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்றும், நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் முதல்வராகவும், காபந்து முதல்வராகவும் இருந்தபோதெல்லாம் ஓ.பன்னீர்செல்வம் கூறவில்லை.
புதிய முதல்வராகப் பொறுப்பேற்று 5 அரசாணைகளில் கையெழுத்திட்ட எடப்பாடி பழனிசாமியும், ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணைக்கு உத்தரவிடவில்லை. இந்த புதிய ஆட்சி நீடித்து நிலைத்து நிற்கக் கூடிய ஆட்சி அல்ல. இந்த ஆட்சி மக்களால் தூக்கி எறியப்படும்.
திமுக ஆட்சி அமைந்தால் முதல் வேலையாக ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்படும். கொல்லைப்புறமாக ஆட்சியைக் கைப்பற்ற திமுக நினைக்கவில்லை. மக்களைச் சந்தித்து அவர்களது ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கவே திமுக விரும்புகிறது'' என்று ஸ்டாலின் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT