Published : 09 Dec 2013 05:20 PM
Last Updated : 09 Dec 2013 05:20 PM

ஜெயலலிதாவுக்கு சிறப்பு படை பாதுகாப்பு கோரும் மனு தள்ளுபடி

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு படை பாதுகாப்பு கோரும் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

இது தொடர்பான பொது நல மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, பிற்பகல் 3 மணிக்கு உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த விசாரணையை தள்ளிவைத்தனர்.

அத்துடன், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன், தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி ஆகியோர் ஆஜராகி, இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசின் கருத்துகளை கேட்டு உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றும், சிறப்பு படை பாதுகாப்பு பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு படை பாதுகாப்பு கோரி வழக்கறிஞர் பாலாஜி என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

முன்னதாக, வழக்கறிஞர் பாலாஜி தனது மனுவில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதால், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு தற்போது தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இது போதாது என்பதால், அவருக்கு பிரதமருக்கு வழங்கப்படுவது போன்று சிறப்பு பாதுகாப்பு படை வீரர்கள் மூலம் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x