Last Updated : 14 Apr, 2017 09:43 AM

 

Published : 14 Apr 2017 09:43 AM
Last Updated : 14 Apr 2017 09:43 AM

கால்சியம் கார்பைடு ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்கும் மாம்பழத்தால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்: உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை

கால்சியம் கார்பைடு மூலம் செயற்கையாக பழுக்கவைக்கப்படும் மாம்பழங்களை சாப்பிட்டால் உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு உணவு பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது.

ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் மாம்பழங்கள் வரத்து அதிகம் இருக்கும். இந்த மாதங்களில் தமிழகத்தில் விளைவது மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மாம்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இவ்வாறு சந்தைக்கு வரும் இயற்கையாகப் பழுத்த மாம்பழங்களோடு பிஞ்சு காய்களும் கொண்டுவரப்படுகின்றன. அவற்றை விரைவாகப் பழுக்க வைக்க, உணவுப் பாதுகாப்புத் துறையால் தடை செய்யப்பட்ட கால்சியம் கார்பைடு கற்களை வியாபாரிகள் சிலர் பயன்படுத்துகின்றனர்.

ஆலையில் பயன்படும் ரசாயனம்

முன்பு, கால்சியம் கார்பைடு கற்களை நேரடியாகவே பழங்களுக்கு நடுவே வைத்து பழுக்க வைத்தனர். தற்போது, அதை 15 கிராம் அளவுள்ள சிறு சிறு பொட்டலங்களாக மடித்துப் பயன்படுத்துகின்றனர். வெல்டிங் பட்டறைகளில் அதிக வெப்பத்தை உருவாக்கப் பயன்படுத்தும் ரசாயன பொருள் கால்சியம் கார்பைடு. செயற்கை உரங்கள், இரும்பு உற்பத்தி ஆலைகளிலும் இது பயன்படுகிறது.

இத்தகைய ரசாயனத்தை மாம்பழங்களைப் பழுக்கவைக்கப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி கதிரவன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

கண்டறிவது எப்படி?

கால்சியம் கார்பைடு கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, கண், தோல் எரிச்சல், வயிற்றுப்புண் ஏற்பட வாய்ப்பு அதிகம். மேலும், புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றாகவும் கால்சியம் கார்பைடு உள்ளது.

செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தின் மேற்பரப்பு மட்டும்தான் பழுத்திருக்கும். நடுப்பகுதி வெள்ளையாக இருக்கும். இத்தகைய பழங்களில் இனிப்பு சுவை, வாசனை குறைவாக இருக்கும். அதிக புளிப்புடன் இருக்கும். இயற்கையாகப் பழுத்த மாம்பழத்தை கத்தியால் எளிதில் வெட்ட இயலும். செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை வெட்டும்போது உள்பகுதி கெட்டியாக இருக்கும்.

4.5 டன் மாம்பழம் பறிமுதல்

சென்னையில் உள்ள பழக்கடைகளில் கடந்த மார்ச் மாதம் நடத்திய சோதனையில், கார்பைடு கல் மூலம் பழுக்கவைக்கப்பட்ட ரூ.3.6 லட்சம் மதிப்புள்ள 4.5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. 143 கிலோ கால்சியம் கார்பைடும் கைப்பற்றப்பட்டது.

இனி மாம்பழ வரத்து, விற்பனை அதிகம் இருக்கும் என்பதால் சோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளோம். செயற்கையாகப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் என்பது தெரிந்தால் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறையின் commrfssa@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மற்றும் 9444042322 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x