Published : 27 Jun 2017 09:38 PM
Last Updated : 27 Jun 2017 09:38 PM

தமிழகத்தில் குட்கா விற்பனை; போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம்: நடவடிக்கை கோரிய வருமான வரித்துறை கடிதம்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை சென்னையில் அனுமதிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் பெற்றது வருமான வரித்துறை சோதனையில் அம்பலமான விவகாரம் பரபரப்பாகியுள்ளது

இது குறித்து குட்கா விவகாரம் தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை தலைமை இயக்குநர் (புலனாய்வு) பி.ஆர்.பாலகிருஷ்ணன் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி விவரமான கடிதம் ஒன்றை அனுப்பினார். அந்தக் கடிதத்தின் நகல் தி இந்துவிடம் கிடைத்துள்ளது, அது வருமாறு:





சென்னையில் உள்ள எம்டிஎம் குட்கா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் ஏற்கெனவே சோதனை நடத்தியிருந்தனர். அந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் நகல்களை வருமானவரித் துறையிடம் ஊழல் தடுப்பு பிரிவினர் கேட்டிருந்தனர். அதன்படி, ஆவணங்களை வருமான வரித்துறையினர் அளித்திருந்தனர். கடந்த 2016 ஜூலை 8-ம் தேதி வருமான வரித் துறையினர் நடத் திய சோதனையின்போது கைப்பற்றப் பட்ட ஆவணங்களில், குட்கா விற் பனையை அனுமதிக்க போலீஸ் உயரதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

குட்கா உற்பத்தி நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான மாதவராவின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்ததில் மாநில அரசோடு தொடர்புடைய பல் வேறு நபர்களுக்கு பணம் செலுத் தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், அவ்வாறு பணம் பெற்றவர்களிடம் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவினர் இதுவரை விசாரணை நடத்தவில்லை. மேலும், வருமான வரித்துறை துணை இயக்குநர் (புலனாய்வு) கண்ணன் நாராயணன், மாதவ ராவிடம் பெற்ற வாக்குமூலத்தில், சென்னை காவல்துறையில் உள்ள உயர் அதிகாரிகள், மாநில அமைச்சர் ஒருவர், சென்னை மாநகராட்சி அதி காரிகள் ஆகியோருக்கு பணம் செலுத்தப்பட்டதாக தெரிவித்துள் ளார்.

மேலும் இதற்கு முன்னர் சென்னை மாநகர காவல் ஆணையர், காவல் இணை ஆணையர், செங்குன் றம் உதவி ஆணையர் ஆகிய பொறுப் புகளில் இருந்தவர்களுக்கு மிகப் பெரிய தொகை கொடுக்கப்பட்டதாக வும் ராவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக காவல்துறை தலைமையக அதிகாரிகள் கூறும்போது, ‘‘வருமான வரித்துறை சோதனை அடிப்படையில் இந்த விவகாரம் குறித்த அறிக்கையை தமிழக முதல்வருக்கு அப்போதைய டிஜிபி அனுப்பியுள்ளார். அந்த ஆவணங்கள் அரசின் நடவடிக்கைக் காக நிலுவையில் உள்ளன. கடந்த 2015-16-ம் ஆண்டில் தீபாவளி போனஸ், கிறிஸ்துமஸ் போனஸ் மற்றும் மாதம்தோறும் செலுத்தப்படும் தொகை என மொத்தம் ரூ.40 கோடி வழங்கியுள்ளதாக ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது’’ என்று தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்ததுடன் நீதி விசாரணை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x