Last Updated : 24 Apr, 2017 09:09 AM

 

Published : 24 Apr 2017 09:09 AM
Last Updated : 24 Apr 2017 09:09 AM

149 ஆண்டுகளுக்கு முன் புலியுடன் போரிட்ட ரயில் ஓட்டுநரின் வீரத்தை போற்றும் கல்லறை: ரயில்வே துறை பாதுகாக்குமா?

கோவை போத்தனூர் ரயில் நிலையப் பகுதியில் சுண்ணாம்பு பூசிய கற்களால் ஆன ஒரு கல்லறை உள்ளது. அதில், SACRED TO THE MEMORY OF JOHN WILSON ENGINE DRIVER MADRAS RAILWAY, WHO WAS KILLED AT WALAYAR BY A TIGER ON 30th APRIL 1868, AGE 29 YEARS. THIS TABLET ERECTED FELLOW WORKERS என்ற ஆங்கில வாக்கியம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கியம் 149 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவத்தை பேசுகிறது.

போத்தனூருக்கு அருகில் உள்ள வாளையாறு அடர்ந்த வனப்பகுதி. காட்டு யானைகள் இப்போதும் ரயிலில் அதிகமாக அடிபட்டு இறப்பது இங்கேதான் என்றால் 150 ஆண்டுகளுக்கு முன்பு இது எப்படிப்பட்ட காடாக இருந்திருக்கும்? அப்போது இங்கு புலிகளும் ஏராளமாக வசித்துள்ளன. அதில் ஒரு புலிதான், இப்பாதையில் ஒரு ரயில் செல்லும்போது இன்ஜின் ஓட்டுநரை நோக்கிப் பாய்ந்துள்ளது. அந்த ஓட்டுநர்தான் ஜான் வில்சன் என்ற ஆங்கிலேயர். புலியிடம் அவர் போராடியுள்ளார். பின்னர் புலி வெளியே பாய்ந்து ஓடிவிட்டது.

கழுத்தில் பலத்த காய மடைந்த அவரை ரயிலில் இருந்த ஃபோர்மேன் உள்ளிட்டவர்கள் மீட்டு போத்தனூர் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். 2 நாட்கள் சிகிச்சை கொடுத்தும் பலனின்றி அவர் இறந்தார். அவரு டன் பணிபுரிந்த ஊழியர்கள் அவரது உடலை அடக்கம்செய்து, கல்லறையில் கல்வெட்டு வைத்துள்ளனர். இதைப்பற்றி 25 ஆண்டுக ளுக்கு முன்பு இங்கே நடந்த ரயில்வே கூட்டம் ஒன்றில் குறிப்பிட்டுப் பேசினார்கள் என்கிறார் ஓய்வு பெற்ற அஞ்சல்துறை அதிகாரி ஹரிஹரன்.

இப்போதெல்லாம் யானைகள் நிறைந்துள்ள காடாக வாளையாறு உள்ளது. இங்கு செல்லும்போது ரயிலின் வேகம் குறைக்கப்பட வேண்டும் என்று சொன்னால் பலரும் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கான வரலாற்றைக் கூறுவதுதான் ஜான் வில்சன் கல்லறை.

அந்தக் காலத்தில் ஓடிய நிலக்கரி ரயிலில், நெருப்பின் விபரீதம் தெரியாமல் ஓட்டுநரை நோக்கி புலி பாய்ந்திருக்க வேண்டும். பிறகுதான் இன்ஜின் பகுதியில் நெருப்புக் கனல் பட்டதில் திக்குமுக்காடி புலி வெளியே ஓடியிருக்க வேண்டும் என்கிறார் ஹரிஹரன்.

கல்லறைப் பகுதியில் வசிப்பவர்கள் கூறும்போது, ‘‘இன்ஜினுக்குள் பாய்ந்த புலி ஓட்டுநரை தாக்கியுள்ளது. புலியுடன் ஓட்டுநர் போராடும்போது எரியும் நிலக்கரி உலையில் புலி விழுந்திருக்கிறது. அதில் புலியும் இறந்துவிட்டது. புலிக்கும், ரயில் ஓட்டுநருக்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரே கல்லறை இது என்றுதான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்’’ என்றனர்.

“புலியால் இறந்த ஓட்டுநரின் குடும்பத்தினர் கல்லறைக்கு அருகே ரயில்வே அலுவலர் குடியிருப்பில் வசித்துள்ளனர் என்றும், அவர்களின் வம்சாவழிகள் முன்பு இங்கே வந்து கல்லறைக்கு அஞ்சலி செலுத்தி சென்றுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. தற்போது யாரும் வருவதில்லை. இருந்தாலும் கல்லறைத் திருநாளன்று இதை சுத்தப்படுத்தி வழிபடுகிறோம்” என்றார் இங்கு குடியிருக்கும் விஜயா என்பவர்.

புலிகள் வாழ்ந்த வாளையாறின் வரலாற்றை கூறும் ஜான் வில்சனின் கல்லறையை ரயில்வே துறையினர் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x