Published : 15 Jun 2017 08:51 AM
Last Updated : 15 Jun 2017 08:51 AM

நகை திருடியவர்களை 3 மணி நேரத்தில் கைது செய்த போலீஸ்: 13 பவுன் பறிமுதல்

ஐஸ் அவுஸ் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகைகளை திருடிய 2 பேரை 3 மணி நேரத்தில் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகளும் பறிமுதல் செய்யப் பட்டன.

சென்னை திருவல்லிக்கேணி, டி.பி. கோயில் 2-வது சந்தில் உமாராணி (47) தனது மகன்களுடன் வசித்து வருகிறார். உமாராணி நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு கோயிலுக்கு சென்றார். பின்னர், இரவு 7.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 13 பவுன் நகைகள் திருடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக உமாராணி தனது மகன் விக்னேஷ்க்கு (25) தகவல் கொடுக்க, அவர் ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

ஐஸ் அவுஸ் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். திருட்டு நடந்த விதத்தை வைத்து பழைய குற்றவாளிகளே இந்த திருட்டில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தில், திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியில் வசிக்கும் பிரகாஷ் (34), வாசுதேவன் (28) ஆகியோரை பிடித்து விசாரிக்க அவர்கள்நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து 13 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

திருட்டு சம்பவம் நடந்த 3 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைப் பிடித்து, நகைகளையும் மீட்ட ஐஸ் அவுஸ் போலீஸாரை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x