Published : 05 Feb 2017 09:59 AM
Last Updated : 05 Feb 2017 09:59 AM

கடற்கரையில் படிந்த எண்ணெய் கசடு நுண்ணுயிர் கலவை மூலம் அகற்றம்: பணியை தொடங்கியது இந்தியன் ஆயில் நிறுவனம்

கடலில் கச்சா எண்ணெய் கொட்டிய தன் காரணமாக, கடற்கரையில் படிந்துள்ள எண்ணெய் கசடுகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தா மல் நுண்ணுயிர்க் கலவை மூலம் அகற்றும் பணியை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கியுள்ளது.

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே எம்டிபி.டபிள்யூ. மேப்பிள் - எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற 2 கப்பல்கள் கடந்த 28-ம் தேதி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், 32,813 டன் அளவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த எம்.டி.டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால் வங்கக்கடலில் எண்ணூர் தொடங்கி நீலாங்கரை வரையிலான கிழக்கு கடற்கரை பகுதியில் சுமார் 32 கி.மீ. தூரம் வரை கச்சா எண்ணெய் பரவி மாசு ஏற்படுத்தியுள்ளது.

இந்த எண்ணெய் படலத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு படையினர், கடலோரக் காவல் படை யினர், மாநகராட்சி ஊழியர்களுடன் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன் னார்வத் தொண்டர்கள் சுமார் 2 ஆயிரம் பேரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடற்கரையில் ஏற்பட்ட எண்ணெய் கசடுகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் நுண்ணுயிர் கலவை மூலம் அகற்றும் பணியை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எஸ்.கே.பூரி, வி.கே.மனோஜ்குமார் உப்ராத்தி ஆகிய இருவரும் எண்ணூர் துறைமுகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கச்சா எண்ணெய் கொட்டியதால் கடற்கரையில் ஏற்பட்டுள்ள எண் ணெய் கசடுகளை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. இதற்காக, எண்ணூர் துறைமுகத்துக்கு உள்ளே 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் ஒன்றரை அடி ஆழம் உள்ள குழி வெட்டப்பட்டுள்ளது. இந்தக் குழியில் அடர்த்தியான பாலித்தீன் ஷீட் போடப்பட்டு, அதன் மீது மாசடைந்த எண்ணெய் மற்றும் மண் கசடுகள் கொட்டப்படும்.

பின்னர், எங்களது இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆராய்ச்சி, வளர்ச்சித் துறையால் கண்டறியப் பட்ட இயற்கை காரணிப் பொருட் கள், இதர சத்துகள் கொண்ட குறிப்பிட்ட நுண்ணுயிர்க் கலவை அதன் மீது இடப்படும். மணலில் படிந்துள்ள எண்ணெய் படிமத்தை இந்த நுண்ணுயிர்க் கலவை 3 மாதங்களுக்குள் உறிஞ்சிவிடும்.

அதன் பிறகு, அந்த மண் பழையபடி வளமான மண்ணாக மாறும். அந்த மண்ணை தோட்டம் அமைக்கவும், கட்டிட வேலை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தலாம். 150 முதல் 200 டன் அளவுள்ள எண்ணெய் கசடுகள் இந்த நுண்ணுயிர்க் கலவை மூலம் அகற்றப்படும். மும்பையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல கப்பல் விபத்து நடந்தபோது, கடலில் கலந்த எண்ணெய் கசடுகளை இந்த நுண்ணுயிர்க் கலவை மூலம் வெற்றிகரமாக அகற்றினோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

விசாரணைக்கு உத்தரவு

இதற்கிடையே, மத்திய பெட்ரோலியம், இயற்கை வாயு துறை கூடுதல் செயலாளர், கப்பல் அமைச்சக இணைச் செயலாளர் (துறைமுகங்கள்), கப்பல் துறை கூடுதல் தலைமை இயக்குநர் ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரடி கள ஆய்வு செய்து எண் ணெய் கசிவை சுத்தம் செய்யும் பணிகளை ஒருங்கிணைக்கவும், ஆய்வு செய்யவும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர். தமிழக தலைமைச் செயலாளரையும் அவர்கள் சந்தித் துள்ளனர்.

எண்ணெய் படலத்தைக் கண் காணிக்கும் பணியில் கடலோரக் காவல் படை கப்பல், ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. கடல் பரப்பில் எங்காவது எண்ணெய் கசிவு திரண்டிருப்பது கண்டறியப்பட்டால் கடலோரக் காவல் படையின் மேற் பார்வையில் தேவையான ஆட்களு டன் கருவிகளும் அனுப்பப்படு கின்றன. விபத்துக்கான காரணங்கள், அதுதொடர்பான காரணிகளைக் கண்டறிய வணிகக் கப்பல் சட்டத் தின் கீழ் விசாரணைக்கு கப்பல் துறை தலைமை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

எர்ணாவூரில் ஆட்சியர் ஆய்வு

இதற்கிடையே, எர்ணாவூர் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் அகற்றப்படும் பணியை திருவள்ளூர் ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேற்று பார்வையிட்டார். பின்னர், செய்தி யாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘இதுவரை 102 டன் கச்சா எண்ணெய் படலம் அகற்றப்பட்டுள்ளது. இப்பணி யில் 1,305 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடல் நீரில் கலந்துள்ள கச்சா எண்ணெய் அகற்றப்பட்ட பிறகு, கரையில் பாறாங்கற்களில் படிந்துள்ள எண் ணெய் படிமங்கள் சுத்தம் செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x