Published : 16 May 2017 08:17 PM
Last Updated : 16 May 2017 08:17 PM

அரசு நிதி கையாடல் விசாரணையை திசை திருப்பவே ராஜமீனாட்சி பொய் புகார் தெரிவித்துள்ளார்: அமைச்சர் சரோஜா

அரசு நிதி கையாடல் விசாரணையை திசை திருப்பவே, உண்மைக்கு புறம்பான புகார்களை ராஜமீனாட்சி தெரிவித்துள்ளார் என அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜ மீனாட்சி. இவர் சமீபத்தில், தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, லஞ்சம் கேட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 10-ம் தேதி புகார் அளித்தார். இந்நிலையில் அந்த புகார் உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நான் தற்போது முதல்வர் தலைமையின் கீழ் , விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு பணியாற்றி வருகிறேன். இந்த நிலையில், தர்மபுரி மாவட்ட தற்காலிக குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராஜ மீனாட்சி, என் மீது உண்மைக்கு புறம்பான புகார்களை, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்தாண்டு செப்டம்பர் 19-ம் தேதி தற்காலிகமாக தர்மபுரி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டார். மாவட்ட நன்னடத்தை அலுவலர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் இணைந்து காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் 1-ம் தேதி, குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை போலி ரசீது மூலம் ராஜமீனாட்சி கையாடல் செய்துள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மற்றும் சமூக பாதுகாப்புத்துறை ஆணையரிடம் நன்னடத்தை அலுவலர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், சிப்காட் மாவட்ட வருவாய் அலுவலரை விசாரிக்க, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதில் விசாரணைக்கு ஆஜராக ராஜ மீனாட்சி மற்றும் நன்னடத்தை அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், மருத்துவ சிகிச்சையை காரணம் காட்டி ராஜ மீனாட்சி ஆஜராகவில்லை. மருத்துவ சான்றிதழுடன் மீண்டும் ஜூன் 8-ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜமீனாட்சி கடந்த 7-ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள என் வீட்டில், சந்தித்து தன்னை தற்காலிக பணியில் இருந்து நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுத்தார். இது போன்று நிரந்தரம் செய்ய அரசு விதிகளில் இடம் இல்லை என்பதை அவர் நன்கு அறிவார். இருந்த போதும், செயலர், ஆணையரை அணுகாமல் அமைச்சரை சந்தித்ததே என் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிறது. நான் அவரை நேரில் சந்திக்குமாறு அழைக்கவே இல்லை.

எனவே, தன் மீது இருக்கும் அரசு நிதி கையாடல் விசாரணையை திசை திருப்பும் நோக்கத்தில், வேண்டுமென்றே அபாண்டமாக, சிலரின் தூண்டுதல் மூலம் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறிய அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவையாகும்'' என்று அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x