Published : 02 Jun 2016 11:37 AM
Last Updated : 02 Jun 2016 11:37 AM
உடுமலை அருகே கோடை விடுமுறை முடிந்து முதல் நாள் வகுப்புக்கு வந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ரோஜா பூ மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்பு கொடுத்தனர்.
உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பேண்ட் வாத்திய குழுவினரின் இசையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
உடுமலை வட்டாரத்திலேயே முதல் வகுப்பில் மிக அதிகமான மாணவர் சேர்க்கையை இப்பள்ளி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சோமசுந்தரம் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளாக இப்பள்ளியை முன்மாதிரி பள்ளியாக மாற்ற முயன்று வருகிறோம். பெற்றோரின் மனநிலையை புரிந்து கொண்டு, அங்கன்வாடி குழந்தைகளுக்கும் ஆங்கில வழிப் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. அங்கு ஐந்து வயதாகும் குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்த்துக் கொள்கிறோம். இதனால் இப்பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எட்டாம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கை 250-யை தாண்டியுள்ளது’ என்றார்.
பள்ளித் தலைமையாசிரியர் இன்பக்கனி கூறும்போது, ‘உடுமலை வட்டார அளவில் முதல் வகுப்பில் அதிகமான மாணவர்களை சேர்த்ததன் மூலம் இப்பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்தாண்டு இன்று (ஜூன் 1) வரை 54 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 27 ஆக இருந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் 24 ஆக இருந்தது. தற்போது இரு மடங்கு சேர்க்கை அதிகரித்துள்ளது. இன்னும் மாணவர்கள் சேர வாய்ப்புள்ளது’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT