Published : 04 Feb 2014 06:16 PM
Last Updated : 04 Feb 2014 06:16 PM

தமிழக மீனவர்கள் 30 பேரை பிப். 13 வரை சிறையில் அடைக்க உத்தரவு

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 30 பேரை பிப்ரவரி 13 வரை யாழ்பாணம் சிறையில் அடைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஜனவரி 27-ல் இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்து ஒரு வாரத்திற்குள் இலங்கை கடற்படையினர் மூன்றாவது முறையாக மீனவர்களை சிறைப்பிடித்து சென்றது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடித்துறைமுகங்களில் இருந்து திங்கட்கிழமை 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4,000 த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

கச்சத் தீவு அருகே அன்று நள்ளிரவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இலங்கை கடற்படையினர் சிறிய ரக ரோந்து கப்பல்களில் ரோந்து வந்தனர். அப்போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் இரண்டு விசைப்படகையும், 12 மண்டபம் மீனவர்களையும் மூன்று விசைப்படகையும் சிறைப்பிடித்து சென்றனர்.

அதுபோல நாகப்பட்டிணம் மற்றும் தஞ்சாவூர் மாவட்த்தைச் சார்ந்த 10 மீனவர்களையும் 3 படகினையும் கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிகல் மைல் தொலைவில் இலங்கை கடற்படையினர் கைது செய்தது.

சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 30பேரையும் காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டு இலங்கை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். காவல்துறையினரின் விசாரணைக்கு பின்னர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று மதியம் 30 மீனவர்களும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மீனவர்களை விசாரித்த ஊர்காவல்துறை நீதிபதி சபேசன் பிப்ரவரி 13 வரை யாழ்பாணம் சிறைச்சாலையில் நீதிமன்ற காவலில் அடைக்க உத்திரவிட்டார்.

மீனவர்கள் சிறைப்பிடிப்பு சம்பவம் குறித்து விசைப்படகு மீனவப் பிரதிநிதி தேவதாஸ் நமது செய்தியாளரிடம் கூறும்போது, "கடந்த ஜனவரி 27 அன்று இலங்கை - தமிழக இருநாட்டு மீனவர்கள் பிரதிநிதிகூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த மீனவப் பிரதிநிதிகளின் கூட்டம் முடிவடைந்து ஒரு வார காலத்திற்குள் இலங்கை கடற்படை மூன்று முறை ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர் மீனவர்களை சிறைப்பிடித்திருக்கிறது. அதுபோலவே இந்திய கடற்படை இலங்கை மீனவர்கள் 9 பேரையும் சிறைப்பிடித்திருக்கிறார்கள்.

இரு நாட்டு கடற்படையினரும் மீனவர்களை சிறைப்பிடித்த சம்பவங்கள் இரு நாட்டு நல்லெண்ண சூழ்நிலையும் சீர்குலைத்ததோடு மட்டுமின்றி நடைபெற்ற மீனவப் பேச்சுவார்த்தை வெறும் நாடகமோ என்ற அச்சத்தை தருவதாக உள்ளது" என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x