Published : 01 Jan 2017 12:20 PM
Last Updated : 01 Jan 2017 12:20 PM

ராமமோகன ராவ் மகன் விவேக்கிடம் மீண்டும் விசாரணை: வருமானவரி புலனாய்வு அதிகாரிகள் திட்டம்

முன்னாள் தமிழக தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மகன் விவேக்கிடம் மீண்டும் ஒருமுறை விசாரணை நடத்த வருமானவரி புலனாய்வு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக தலைமைச் செயலாளராக இருந்தவர் ராமமோகன ராவ். இவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த 21-ம் தேதி சோதனை நடத்தினர். அவரது மகன் விவேக், உறவினர்கள், நண்பர்களின் வீடு, அலுவலகங்கள் உட்பட 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ராமமோகன ராவ், அவரது மகன் விவேக் நேரில் ஆஜராகுமாறு வருமானவரி புலனாய்வு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இதைத் தொடர்ந்து தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி ராமமோகன ராவ் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.

ராமமோகன ராவ் மகன் விவேக், அவரது வழக்கறிஞர் அமலநாதன், உறவினர்கள் ராஜகோபாலன், முன்னாள் வன அதிகாரி கல்யாணசுந்தரம் ஆகியோர் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டதில், விவேக் தவிர மற்ற அனைவரும் விளக்கம் அளித்துவிட்டனர்.

இதையடுத்து, தொடர்ந்து நினைவூட்டல் கடிதமும், செல்போனில் குறுந்தகவலும் அவருக்கு அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து, வருமானவரி புலனாய்வு அதிகாரிகளிடம் விவேக் நேற்று முன்தினம் நேரில் ஆஜராகி ஐந்தரை மணி நேரம் விளக்கம் அளித்தார். பல கேள்விகளுக்கு அவர் மழுப்பலாகவே பதில் அளித்ததாக வருமானவரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த காட்சிகளை வருமானவரி புலனாய்வு அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். அதைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை ஆலோசித்தனர். அவரிடம் மேலும் சில கேள்விகள் கேட்க வருமானவரி புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. எனவே, விவேக்கை மீண்டும் ஒருமுறை விசாரணைக்கு அழைக்க வருமானவரி அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x