Published : 07 Jul 2016 11:46 AM
Last Updated : 07 Jul 2016 11:46 AM

இலங்கை சிறைகளில் உள்ள: மீனவர்களை விடுவிக்க கோரி பாம்பனில் கடலில் இறங்கி போராட்டம்

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளை விடுவிக்கக் கோரி பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி அவர்களின் படகுகளுடன் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் செல்வது தொடர்கிறது. இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் கச்சத்தீவை மீட்பதுடன், பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசும், மீனவர்களும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 57 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து, அங்கு உள்ள சிறைகளில் அடைத்து உள்ளது. இதேபோல் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 105 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் பிடிக்கப்பட்டு அங்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். பாரம்பரிய மீன் பிடி உரிமையைப் பெற்றுத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை பாம்பன் தெற்குக் கடலில் இறங்கி நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மீனவர் சங்கத் தலைவர்கள் அருள், மனோகோமஸ், ஜெயபிரகாஷ் என 150 பேர் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது மீனவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x