Published : 04 Jul 2016 09:41 AM
Last Updated : 04 Jul 2016 09:41 AM
கொலை, கொள்ளை, வழிப்பறி யைத் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்துத் தெருக்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு) சேலம் மாவட்ட 11-வது மாநாடு சேலத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிஐடியு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட தானியங்களின் விலை ஏற்றத்துக்கு மத்திய அரசே காரணம். தானியங்களை உரிய நேரத்தில் இறக்குமதி செய்யாமல் காலம் தாழ்த்தியதால்தான் விலை உயர்ந்துள்ளது.
தொழிலாளர்களின் வைப்பு நிதியை திரும்பப் பெற வரி போடலாம் என்ற மத்திய அரசின் முயற்சி தொழிலாளருக்கு எதிரான நடவடிக்கையாகும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18 ஆயிரம், ஒப்பந்தத் தொழிலாளர் முறை ஒழிப்பு ஆகியவை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற உள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
பாரம்பரிய தொழில்களான தீப்பெட்டி மற்றும் பட்டாசு தயாரிப்பு, ரப்பர் உற்பத்தி, விசைத்தறி தொழில்கள் உள்ளிட்டவை முடங்கிவிட்டன. இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு இதே நிலை நீடித்தால் வேலை இழப்பு அதிகரிக்கும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கொலையாளிகள் எவ்வித அச்சமுமின்றி கொலை களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, கொலை, கொள்ளை, வழிப்பறியை தடுக்க தமிழகத்தின் எல்லா தெருக்களிலும் கண் காணிப்பு கேமரா (சிசிடிவி) பொருத்த வேண்டும். சுவாதி கொலையில் குற்றவாளியை கண்டுபிடிக்க நீதிமன்றம் கெடு விதித்ததை அரசுக்கு எதிரான கண்டனமாகவே கருத முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT