Published : 11 Mar 2014 04:50 PM
Last Updated : 11 Mar 2014 04:50 PM

பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் கஞ்சித் தொட்டி போராட்டம்

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதற்கு ஆதரவாக செயல்படும் மீன்வளத்துறை அதிகாரிகளைக் கண்டித்து பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தை இன்று நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் கடந்த ஒரு மாத காலமாக தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்துவதை தடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம், கடலில் இறங்கி போராட்டம், மீன்வளத்துறை முற்றுகைப் போராட்டம், ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தம் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தினர்.

ஆனால் வெறுமனே மீன்வளத்துறை அதிகாரிகள் 41 விசைப்படகுகள் மீது நடவடிக்கை எடுத்து பாம்பனில் வாரம் மூன்று நாள் மட்டும் செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு, ஆறுநாட்கள் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இதனால் மீண்டும் நாட்டுப் படகு மீனவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து கடலுக்குச் செல்லாமல் தங்களின் படகுகளை கரையோரங்களில் மூன்றாவது நாளாக இன்றும் நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று அடுத்த கட்டப் போராட்டமாக மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து பாம்பன் குந்துகால் பகுதியில் கஞ்சித் தொட்டி திறந்து பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் பகிர்ந்து உண்ணும் போராட்டத்தை நடத்தினர்.

இந்தப் போராட்டம் குறித்து நாட்டுப்படகு மீனவர்களின் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அருள் நமதுசெய்தியாளரிடம் கூறியது:

"விசைப்படகு மீனவர்கள் வாரத்தில் 3 தினங்கள் கடலுக்குச் செல்வதும், நாட்டுப்படகு மீனவர்கள் 4 தினங்கள் கடலுக்குச் செல்வதும் தமிழகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. ஆனால் பாம்பனில் மட்டும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசைப்படகு மீனவர்களுக்கு வாரத்திற்கு ஆறு தினங்கள் கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும் நாட்டுப்படகு மீனவர்களை கரையில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லக்கூடாது என்று புதியதாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் விசைப்படகு மீனவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கடந்த ஒரு மாத காலமாக நாட்டுப்படகு மீனவர்கள் போராடியும் முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பாம்பனில் விசைப்படகு மீனவர்கள் வாரத்திற்கு மூன்று தினங்களும், நாட்டுப்படகு மீனவர்கள் வாரத்திற்கு நான்கு தினங்கள் கடலுக்கு செல்ல முன்பு போல் அனுமதி வழங்க கோரியும், நாட்டுப்படகு மீனவர்கள் கரையில் இருந்து வெறுமனே 3 கிலோ மீட்டர் தூரம் தான் செல்ல வேண்டும் என்ற புதிய உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தியும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் உணவுக்காக கஞ்சித்தொட்டி திறந்து போராட்டம் நடத்தியுள்ளோம்.

எங்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூன்றாவது நாளாக ராமநாதபுரம் மாவட்ட அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x