Published : 20 Apr 2017 07:37 AM
Last Updated : 20 Apr 2017 07:37 AM

பொறியியல் படிப்புக்கு மே 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

பொறியியல் படிப்புக்கு மே 1-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் 570-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் வழங்கப்படும் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். இந்த கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேற்று இரவு வெளியிட்டார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு ஏப்ரல் 30-ம் தேதி நாளிதழ்களில் வெளியிடப்படும். ஆன்லைன் பதிவு மே 1-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடையும். பூர்த்தி செய்து பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை ஜூன் 3-ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 20-ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ம் தேதி வெளியாகும். விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான கலந் தாய்வு ஜூன் 27-ம் தேதி தொடங்கும் என்றார்.

துணைவேந்தர்கள் நியமனம்

அவர் மேலும் கூறுகையில், “சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் ஆகியவற்றுக்கு விரைவில் துணைவேந் தர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தில் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு இருக்காது என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.

பேட்டியின்போது உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் சுனில் பாலிவால், அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் இந்துமதி, இயக்குநர் மல்லிகா ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x