Published : 27 Apr 2017 08:20 AM
Last Updated : 27 Apr 2017 08:20 AM

விஷ வாயு தாக்கி துப்புரவு தொழிலாளி பலி

முகப்பேரில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி துப்புரவு தொழிலாளி பலியானார்.

சென்னை முகப்பேர் கிழக்கு ஓரிச் சாலை பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அந்த அடைப்பை எடுக்கும் பணியில் நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பகுதியை சேர்ந்த ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களான ராமச்சந்திரன், தாஸ்(30) ஆகியோர் நேற்று ஈடுபட்டிருந்தனர். பாதாள சாக்கடைக்குள் இறங்கி, அவர்கள் அடைப்பை சரி செய்து கொண்டிருந்தபோது விஷ வாயு தாக்கியது.

இதனால் அவர்கள் இருவரும் குழிக்குள் மயங்கி விழுந்தனர். அருகில் இருந்தவர்கள் இதைப்பார்த்து ஜே.ஜே.நகர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குழிக்குள் இறங்கி இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் தாஸ் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார். மயக்க நிலையில் இருந்த ராமச்சந்திரனை ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து ஜே.ஜே.நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x