Published : 14 Sep 2013 01:34 AM
Last Updated : 14 Sep 2013 01:34 AM

காகித ஆலை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்க: வைகோ

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலையின் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரூர் மாவட்டம் புகளூரில் 1979 இல் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை (TNPL), 1984 ஆம் ஆண்டு முதல் அதன் உற்பத்தியைத் தொடங்கியது.

நாள் ஒன்றுக்கு 300 டன் உற்பத்தியில் தொடங்கிய ஆலை, இன்று நாள் ஒன்றுக்கு 1200 டன் என்ற அளவில் உற்பத்தி செய்யும் அளவில் வளர்ந்துள்ளது. இந்த ஆலை இதன் உற்பத்தியில் 20 சதவிகிதத்தை 50 க்கும் மேலான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. தமிழ்நாடு அரசாங்கத்திற்கு இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 100 கோடி ரூபாய்க்கும் மேல் நிகர லாபத்தை ஈட்டிக் கொடுக்கின்றது.

இந்த நிறுவனத்தில் மொத்தம் 3,000 க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அதில் நாளென்றுக்கு 1000 ரூபாய் சம்பளத்தில் சுமார் 1800 நிரந்தரத் தொழிலாளர்களும், நாளொன்றுக்கு ரூ. 360/- மட்டும் பெற்றுக்கொண்டு சுமார் 1300 ஒப்பந்தத் தொழிலாளர்களும் இங்கு பணிபுரிந்து வருகிறார்கள். இந்த இரு தரப்புத் தொழிலாளர்களும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிப்பவர்கள்.

இந்த இரண்டு பிரிவுத் தொழிலாளர்களும் ஒரே வேலையைச் செய்தாலும், நிரந்தரத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியமும், பல சலுகைகளும் 25 ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி, அண்ணா தொழிற்சங்கம் உட்பட அனைத்துத் தொழிற்சங்கங்களும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித ஆலை ஒப்பந்தத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, இக்கூட்டமைப்பின் சார்பாக 2009 செப்டம்பரில் கடந்த தி.மு.க ஆட்சியிடத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்த நேரத்தில், எதிர்க்கட்சியாக இருந்த இன்றைய முதலமைச்சர் இத்தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது என்றும், அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், இவர்களுக்கு ஆதரவாக கடந்த 02.09.2009 ஆம் ஆண்டு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் அறிக்கை கொடுத்ததோடு, 04.09.2009 ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா தி.மு.க. சார்பில் கரூரில் இந்த ஆலையின் முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் மு.தம்பிதுரை அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆனால், அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், காகித ஆலையின் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இவர்கள் பலமுறை மாண்புமிகு முதலமைச்சரிடமும், கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், கரூர் தொகுதியிலுள்ள அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடமும் பலமுறை முறையிட்டும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களோ, தொழில்துறை அமைச்சர் அவர்களோ, தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தாதது வேதனைக்குரியது. இவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று வைகோ அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x