Published : 20 Jul 2016 11:07 AM
Last Updated : 20 Jul 2016 11:07 AM

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அடிக்கடி மாயமாகும் மனநோயாளிகள்: இடநெருக்கடியில் தவிக்கும் மன நலத்துறை சிகிச்சை பிரிவு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் 1957-ஆம் ஆண்டு முதல் ஒரே ஒரு மன நல மருத்துவரைக் கொண்டு மன நல சிகிச்சைப்பிரிவு தொடங்கப்பட்டது.

அதன்பிறகு, இத்துறையில் மனநல மருத்துவப்பயிற்சி மாணவர் பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டது. சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவ மனைக்கு பிறகு, மதுரை அரசு மருத்துவமனைக்கே அதிகளவு நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

ஒரு நாளைக்கு 25 முதல் 30 புதிய நோயாளிகள், 200 பழைய நோயாளிகள் சிகிச் சைக்கு வந்து செல்கின்றனர். இதுதவிர, தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டு சிகிச்சை பெறுகிறவர்கள், விபத்து மற்றும் பல்வேறு மருத்துவத்துறைகளில் சிகிச்சை பெறுவோரில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் அவர்களும், மன நல சிகிச்சைக்கு இத்துறைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள. மூன்று குழுவாக ஒரு பேராசிரியர் தலைமையில் மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆலோசனை, சிகிச்சை, ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: எல்லா மருத்துவமனைகளிலும் மனநலத் துறையின் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிகிச்சைப் பிரிவும் ஒரே இடத்தில் செயல் படுகிறது. இத்துறை நோயா ளிகள் பாதுகாக்கப்பட வேண் டியவர்கள்.

மருத்துவர்கள் நேரடி கண்காணிப்பு அவசியம். ஆனால், மதுரை அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, ஆலோசனை மையம்

ஒரு இடத்திலும் உள் நோயாளிகள் சிகிச்சைப்பிரிவு வேறு பகுதியிலும் செயல் படுகிறது. அதனால், மருத்து வர்கள் உடனுக்குடன் உள் நோயாளிகள் சிகிச்சைப்பிரிவுக்கு சென்று வரமுடியவில்லை. உள் நோயாளிகள் சிகிச்சைப்பிரிவில் மொத்தம் 60 படுக்கைகள் உள்ளன. மருத்துவர் நேரடி கண்காணிப்பு, அவர்களை பாதுகாக்க உதவியாளர் இல்லாததால் 30 நோயாளிகளே அனுமதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் கண்காணிப்பு இல்லாததால் சிகிச்சை பெறும் மன நோயாளிகள் மாயமாகி விடுகின்றனர். பிறகு அவர்களை போலீஸில் புகார் செய்து மீட்க வேண்டிய நிலை உள்ளது.

வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு பாதுகாப்பில்லாத பகுதியில் செயல்படுகிறது. இப்பகுதியில் இருக்கும் கோயிலுக்கு வெளியாட்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில வாரம் முன், அவர்கள் சாமிக்கு படைப்பதற்காக பொங்கல் சமைத்தபோது கேஸ் சிலிண்டர் வெடித்து மனநல சிகிச்சைப்பிரிவு கட்டிட கண்ணாடிகள் நொறுங்கி விழுந்தன.

ஏற்கெனவே மன நல சிகிச்சைக்கு வந்த நோயாளிகள், இந்த சம்பவத்தால் மேலும் அதிர்ச் சியடைந்தனர். இந்த கோயில் பகுதியில் வசித்தவர்கள் தான், மருத் துவமனை கட்ட அக்காலத்தில் நிலம் கொடுத் ததால் அவர்களை கோயிலுக்கு வருவதற்கு மருத் துவமனை நிர்வாகம் தடை விதிக்க முடிய வில்லை என்றனர்.

டீன் எம்ஆர்.வைரமுத்து ராஜூவிடம் கேட்டபோது, மனநல வெளிநோயாளிகள் சிகிச்சைப் பிரிவில் போதிய இடம் வசதியி ல்லை என்பது உண்மைதான். அந்த கட்டிடத்திலே மேலே மாடி கட்டி மொத்தமாக அங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்றார்.

மனநல மருத்துவர்கள் பற்றாக்குறை

நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க 3 பேராசிரியர்கள், 6 உதவிப் பேராசிரியர்கள் உள்ளனர். கவுன்சிலிங் வழங்க ஒரு உளவியல் ஆலோசகர் உள்ளனர். மருத்துவமனையில் நோயாளிகள் வருகைக்கு தகுந்தார்போல், மருத்துவர்கள் இல்லை. மன நலப்பிரிவின் பட்டமேற்பு மாணவர்களை கொண்டே மருத்துவர் பற்றாக்குறை சமாளிக்கப்படுகிறது. புதிய நோயாளிகளுக்கு சிகிச்சை, ஆலோசனை வழங்க 45 நிமிடங்களாகிறது. பழைய நோயாளிகளுக்கு 15 நிமிடங்களாகிறது.

மருத்துவர் பற்றாக்குறையால் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர் கள், மாணவர்களுக்கு பயிற்சியும் வழங்கிவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், மதியம் 12 மணியுடன் வெளி நோயாளிகளுக்கான சிகிச்சை பதிவு நிறுத்தப்படுவதால் சிகிச்சை, ஆலோசனைக்கு வரும் நோயாளிகள் திரும்பி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x