Published : 17 Oct 2014 10:07 AM
Last Updated : 17 Oct 2014 10:07 AM
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்த சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. பஸ் டிக்கெட் முன் பதிவு செய்ய 25 சிறப்பு கவுன்ட்டர்கள் இன்று திறக்கப்படுகின்றன.
வரும் 22-ம் தேதி தீபாவளி பண்டிகை வருவதையொட்டி, ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். ரயில்களின் முன்பதிவு முடிந்துள்ள நிலையில், பெரும்பாலானோர் அரசு பஸ்களையே நம்பியுள்ளனர். இந்நிலையில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வரும் 17 முதல் 21-ம் தேதி வரை மொத்தம் 9,088 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, இன்று (அக்.17) 501 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல 18-ம் தேதி 501 சிறப்பு பஸ்களும், 19-ம் தேதி 699, 20-ம் தேதி 1,400, 21-ம் தேதி 1,652 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 4,753 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்களுக்கான டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்கெனவே உள்ள 9 கவுன்ட்டர்கள் உட்பட மொத்தம் 25 சிறப்பு கவுன்ட்டர்கள் இன்று திறக்கப்படுகின்றன.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் நடைமேடை 1 மற்றும் 2-ல் விழுப்புரம், காஞ்சிபுரம், திண்டிவனம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல 7, 8, 9 ஆகிய நடைமேடைகளில் நெல்லை, மதுரை, திருச்சி, கோவை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் டிக்கெட் முன்பதிவு செய்யாத பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர 3, 4, 5, 6 ஆகிய நடைமேடைகளில் நீண்ட தூரம் செல்லும் டிக்கெட் முன்பதிவு செய்த பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் தற்காலிக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT