Published : 26 Feb 2017 03:01 PM
Last Updated : 26 Feb 2017 03:01 PM
ஹைட்ரோ கார்பன் எரிவாயுவை எடுக்க அனுமதித்தால், புதுக் கோட்டை நெடுவாசல் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் அபாயம் உள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம், ராமநாத புரத்தில் நேற்று நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் முகமது அலி தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் கே. வரதராஜன், பொதுச் செயலாளர் சண்முகம் உள்ளிட்ட மாநிலக் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களும், விவசாயிகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எரிவாயு எடுக்கும்போது அதிலிருந்து வெளியேறும் நச்சுப் பொருட்களால் நீர், நிலம், காற்று மாசுபடும். மேலும், புற்றுநோய் ஏற்படவும் இது வழிவகுக்கும். எரிவாயு எடுக்கும் பணி தொடங்கினால், அடுத்த 25 ஆண்டுகளில் இப்பகுதி வாழத் தகுதியற்றதாக மாறி விடும். எனவே, இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.
தனியார் சர்க்கரை ஆலைகள் , நான்கு ஆண்டுகளாக மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை வழங்கவில்லை. தனியார் ஆலைகள் ரூ. 1,900 கோடி விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளனர். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் ரூ. 400 கோடி பாக்கி வைத்துள்ளனர். ரூ. 2,300 கோடி கரும்பு பண பாக்கியை விவசாயிகளுக்கு பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT