Published : 05 Jan 2016 09:41 PM
Last Updated : 05 Jan 2016 09:41 PM

இலங்கையில் உள்ள 104 மீனவர்கள், 66 படகுகளை மீட்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 104 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 66 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் எழுதிய கடிதத்தில், ''கடந்த 24 மணி நேரத்தில், அக்கரைப்பேட்டை, ராமநாதபுரம், புதுக்கோட்டையில் இருந்து மீன்பிடிக்க 4 படகுகளில் சென்ற, 20 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, முல்லைத்தீவு, தலைமன்னார் மற்றும் காங்கேசன் துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இலங்கை வசம் உள்ள தமிழக மீனவர்கள் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் பல வாரங்களாக அங்குள்ளதால், பண்டிகைகளை குடும்பத்துடன் கொண்டாட முடியவில்லை.

தற்போது இலங்கை வசம் 66 மீன்பிடி படகுகள் உள்ளன. பல மாதங்களுக்கு முன்னரே மீனவர்கள் விடுவிக்கப்பட்டபோதிலும், அவர்களின் பல படகுகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. படகுகளும், மீன்பிடி சாதனங்களும் முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் தற்போது உள்ளன. இதனால் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர்வதால், மத்திய அரசு இந்த விவகாரத்தில் எந்த ஒரு உறுதியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது வெளிப்படையாக தெரிகிறது. இது மீனவ மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாக்ஜல சந்தியில் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிப்பது தமிழக மீனவர்களின் உரிமை என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. கச்சத்தீவு விவகாரத்தில் இந்திய- இலங்கை ஒப்பந்தங்களை ரத்து செய்யக்கோரி நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இதில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

நாட்டில் முதல் முறையாக, ஆழ்கடல் மீன் பிடிப் படகுகள் வாங்க 30 லட்சம் ரூபாயை தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்துக்கு ரூ.1,520 கோடி, ஆண்டு பராமரிப்புக்கு ரூ.10 கோடி நிதியுதவி கோரப்பட்டு, கடந்த 18 மாதங்களாக ஒப்புதல் நிலுவையில் உள்ளது. இதற்கான அனுமதியை விரைவில் வழங்க வேண்டும்.

இலங்கை வசம் வெகு காலமாக உள்ள மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் பருவமழை காரணமாக சேதமடைந்துள்ளன. இந்த படகுகளை உடனடியாக மீட்பதுடன், அவற்றை மீண்டும் மீனவர்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைத்துத் தரவேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தமிழக மீனவர்கள் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண உறுதியான, நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், நீங்கள் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு, இலங்கை அரசின் உயர்மட்ட அளவில் பேசி, 104 தமிழக மீனவர்கள் மற்றும் 66 படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x