Last Updated : 11 Jun, 2017 09:29 AM

 

Published : 11 Jun 2017 09:29 AM
Last Updated : 11 Jun 2017 09:29 AM

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் எது? - எல்லா வசதிகளையும் கணக்கிட்டு மத்திய அரசு தேர்வு செய்யும்: தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைய உள்ள இடத்தை வெயிட்டேஜ் முறையில் மத்திய அரசு தேர்வு செய்யும் என தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க செங்கிப்பட்டி (தஞ்சை), செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), புதுக்கோட்டை, பெருந்துறை (ஈரோடு), தோப்பூர் (மதுரை) ஆகிய இடங்களை கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இங்கு மத்திய குழுவினர் 2015-ம் ஆண்டு ஆய்வு செய்தனர். அதன்பின் கடந்த பிப்.27-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமரை சந்தித்து, செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க செங்கிப்பட்டி (தஞ்சை), செங்கல்பட்டு (காஞ்சிபுரம்), புதுக்கோட்டை, பெருந்துறை (ஈரோடு), தோப்பூர் (மதுரை) ஆகிய இடங்களை கடந்த 2014-ம் ஆண்டு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இங்கு மத்திய குழுவினர் 2015-ம் ஆண்டு ஆய்வு செய்தனர். அதன்பின் கடந்த பிப்.27-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமரை சந்தித்து, செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, தமிழகத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனையை ‘சவால் முறை’ என்ற பிரிவின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 10 கேள்விகள் கேட்டு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடந்த மார்ச் 3-ம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது. அதன்பேரில் 5 இடங்களையும் ஒப்பிட்டு 10 கேள்விகளுக்கான விவரங்கள் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இவற்றுடன் கடந்த மே 5-ம் தேதி தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அனுப்பிய கடிதத்தில், “2015-ம் ஆண்டு மத்திய குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால், இதுவரை எந்த இடம் என மத்திய அரசு அறிவிக்கவில்லை. செங்கிப்பட்டியில் அமைவது பொருத்தமாக இருக்கும் என தெரியவருகிறது. இவ்விவகாரத்தில் மேலும் தாமதிக்காமல் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இக்கடிதம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் திடீரென போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அதேபோல, தமிழக அரசு பரிந்துரைத்தபடி செங்கிப்பட்டியில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என டெல்டா மாவட்ட மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக சுகாதாரத் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, “செங்கிப்பட்டி அல்லது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மதுரையில் தேர்வு செய்யப்பட்ட நிலத்தடியில் எரிவாயுக் குழாய் பதிக்கப்பட்டுள்ளதால், அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மதுரையில் அரசு சார்பில் தற்போது ரூ.356 கோடி செலவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

எனினும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய குழுவினர் சிறிது ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் கேட்டுக் கொண்டதால், மாற்று ஏற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கிப்பட்டியில் இதுபோன்ற எந்தப் பிரச்சினையும் இல்லை. மற்ற இடங்களைவிட செங்கிப்பட்டியே சிறந்தது என மத்திய குழுவினர்தான் முதலில் முடிவு செய்தனர். அதன்பின் தமிழக முதல்வரும் இதையே பிரதமரிடம் பரிந்துரை செய்தார்.

எனவே, தற்போதைக்கு செங்கிப்பட்டி தேர்வாக இருக்கிறது. அதுவும் உறுதியாக முடிவாகவில்லை. தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் அமைந்தாலும் நல்லதுதான். இவ்விஷயத்தில் தமிழக அரசு மட்டும் முடிவு எடுத்துவிட முடியாது. சவால்முறை கேள்விகளுக்கான மதிப்பெண்கள், ஒவ்வொரு இடத்திலும் உள்ள பிற வசதிகளைக் கணக்கிட்டு வெயிட்டேஜ் முறையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடத்தை மத்திய அரசுதான் முடிவு செய்யும்” என்றனர்.

மத்திய குழுவினருக்கு திருப்தி

‘சவால் முறை’ வாயிலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு தமிழக சுகாதாரத்துறை அனுப்பிய கடிதத்தில், “மாநிலத்துக்கும், மத்திய மண்டலத்துக்கும் மையப்பகுதியாக உள்ள செங்கிப்பட்டியில் 206.11 ஏக்கர் நிலம் உள்ளது. அதன் அருகில் உள்ள பெரம்பலூர், கரூர், அரியலூர் மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள் இல்லை. இதனால், செங்கிப்பட்டிக்கு ஆய்வுக்காக வந்த மத்தியக் குழுவினருக்கு இந்த இடம் திருப்தியை ஏற்படுத்தியது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x