Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM

பைப் வெடிகுண்டு வழக்கு: தமிழர் விடுதலைப் படையினர் கைது

மதுரை ரிலையன்ஸ் நிறுவனம், புதுவை மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீடுகளில் பைப் வெடிகுண்டு வைத்ததாக மதுரையில் தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்துள் ளனர்.

மதுரை உத்தங்குடியில் ரிலையன்ஸ் மார்க்கெட் நிறுவன வளாகத்தில் பிப்.11-ம் தேதி பைப் வெடிகுண்டை கைப்பற்றிய போலீஸார் திருவாதவூர் செல்லும் வழியிலுள்ள ஒரு குவாரிக்குள் வைத்து வெடிகுண்டை செயல் இழக்கச் செய்தனர்.

பின்னர் வெடிமருந்துகளைத் தடய அறிவியல் துறை சோதனைக்கு உட்படுத்தியதில், மத்திய அமைச்சர் நாராயணசாமி யின் வீட்டிலும், மதுரை ரிலையன்ஸ் வளாகத்திலும் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டும் ஒரே மாதிரியாகத் தயாரிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. எனவே தேசியப் புலனாய்வு அதிகாரிகள் மதுரையில் இதுபற்றி விசாரணை நடத்திச் சென்றனர்.

துண்டுப் பிரசுரங்கள்

இதற்கிடையே ரிலையன்ஸ் வளாகத்தில் வெடிகுண்டு கிடந்த இடத்தில் தமிழர் விடுதலைப்படை என்றுஅச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் கிடந்தன. தமிழர் களுக்கு துரோகம் விளைவித்த மத்திய அரசைக் கண்டித்து வாசகங்கள் இருந்தன.

ஆசிரியை வீட்டில் பதுங்கல்

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு ஒத்தக்கடை அருகே போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த சிவகங்கை மாவட்டம் பூவாச்சிபட்டியைச் சேர்ந்த திருச்செல்வம் (33) என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்தவர் என்பதும், வெடிகுண்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதால் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்தது. இவர் அளித்த தகவலின்பேரில் மதுரை மேலூர் அருகே மண்கட்டி தெப்பக்குளம் கிராமத்திலுள்ள அரசுப் பள்ளி தலைமையாசிரியை தமயந்தி வீட்டில் மேலும் 2 நண்பர்கள் தங்கியிருப்பதாகத் தெரியவந்தது.

இதையடுத்து ஊமச்சிகுளம் டிஎஸ்பி சரவணக்குமார் தலைமை யில் போலீஸார் அந்த வீட்டுக்கு விரைந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தமயந்தியின் சகோதரரான சிவகங்கை மாவட்டம் பாவணக்கோட்டையைச் சேர்ந்த தங்கராஜ் (எ) தமிழரசன் (37), ஆத்தாங்குடியைச் சேர்ந்த கவியரசன் (29) ஆகியோரைக் கைது செய்தனர்.

பின்னர் தமிழரசனிடம் விசாரித்த போது அவர் திரைப்பட இயக்குநர் எனவும், மதுரை வில்லாபுரத்தில் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்ததாகவும் கூறினார். இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை மதுரை மாவட்ட போலீஸாரும், கியூ பிரிவு போலீஸாரும் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு அண்மையில் மிரட்டல் விடுக்கப்பட்ட பின்னணியிலும் இவர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. எனவே கைது செய்யப்பட்டுள்ள 3 பேரிடமும் மதுரை மாவட்ட போலீஸாரும், கியூ பிரிவு போலீஸாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களைத் தவிர மேலும் 2 அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு பைப் வெடிகுண்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x